எரேமியா 44:1-8
1
மிக்தோல், தக்பானேஸ், மெம்பிஸ் ஆகிய கீழ் எகிப்திலும், பத்ரோசிலும் வாழ்ந்த யூதர்களைக் குறித்து எரேமியாவுக்கு இந்த வார்த்தை வந்தது:
2
“இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: எருசலேமின்மேலும், யூதாவின் பட்டணங்களிலும் நான் கொண்டுவந்த பேரழிவை நீங்கள் கண்டீர்கள். இன்று அவை குடியிருப்பாரின்றி பாழாக்கப்பட்டு கிடக்கின்றன.
3
அவர்கள் செய்த தீமையினாலே இப்படி நடந்தது. அவர்களோ நீங்களோ உங்கள் முற்பிதாக்களோ, ஒருபோதும் அறிந்திராத வேறு தெய்வங்களை அவர்கள் வணங்கி, அவைகளுக்குத் தூபம் எரித்து எனக்குக் கோபமூட்டினார்கள்.
4
நான் திரும்பத்திரும்ப என் ஊழியர்களான இறைவாக்கினரை அனுப்பினேன். அவர்கள், ‘நான் வெறுக்கிற இந்த அருவருக்கத்தக்க செயலைச் செய்யவேண்டாம்’ என்று சொன்னார்கள்.
5
ஆனாலும் என் மக்கள் அதைக் கேட்கவோ, கவனிக்கவோ இல்லை. தங்களுடைய கொடுமையிலிருந்து திரும்பவுமில்லை. வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவதை நிறுத்தவும் இல்லை.
6
ஆகையால் என்னுடைய கடுங்கோபம் ஊற்றப்பட்டது. அது யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்து, அவைகளை இன்று இருப்பதுபோல் வெறும் பாழிடமாய் ஆக்கியிருக்கிறது.
7
“இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுகிறதாவது: ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் யூதாவிலிருந்து அகற்றி, ஒருவரும் உங்களுக்கென மீதியாயிருக்கவிடாமல், இப்படியான பெரும் பேராபத்தை ஏன் உங்கள்மேல் கொண்டுவருகிறீர்கள்?
8
நீங்கள் குடியிருக்கும்படி வந்து சேர்ந்திருக்கும் எகிப்து நாட்டில் வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டி, உங்கள் கைகளின் செயல்களினால் ஏன் என்னைக் கோபமடையச் செய்கிறீர்கள்? உங்களையே நீங்கள் அழித்து, பூமியிலுள்ள எல்லா மக்கள் மத்தியிலும் நீங்கள் உங்களைச் சாபப்பொருளாகவும், பழிச்சொல்லாகவும் ஆக்குகிறீர்கள்.
Settings