Skip to content
எரேமியா 44:1-14

எரேமியா 44:1-14

1
மிக்தோல், தக்பானேஸ், மெம்பிஸ் ஆகிய கீழ் எகிப்திலும், பத்ரோசிலும் வாழ்ந்த யூதர்களைக் குறித்து எரேமியாவுக்கு இந்த வார்த்தை வந்தது:
2
“இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: எருசலேமின்மேலும், யூதாவின் பட்டணங்களிலும் நான் கொண்டுவந்த பேரழிவை நீங்கள் கண்டீர்கள். இன்று அவை குடியிருப்பாரின்றி பாழாக்கப்பட்டு கிடக்கின்றன.
3
அவர்கள் செய்த தீமையினாலே இப்படி நடந்தது. அவர்களோ நீங்களோ உங்கள் முற்பிதாக்களோ, ஒருபோதும் அறிந்திராத வேறு தெய்வங்களை அவர்கள் வணங்கி, அவைகளுக்குத் தூபம் எரித்து எனக்குக் கோபமூட்டினார்கள்.
4
நான் திரும்பத்திரும்ப என் ஊழியர்களான இறைவாக்கினரை அனுப்பினேன். அவர்கள், ‘நான் வெறுக்கிற இந்த அருவருக்கத்தக்க செயலைச் செய்யவேண்டாம்’ என்று சொன்னார்கள்.
5
ஆனாலும் என் மக்கள் அதைக் கேட்கவோ, கவனிக்கவோ இல்லை. தங்களுடைய கொடுமையிலிருந்து திரும்பவுமில்லை. வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவதை நிறுத்தவும் இல்லை.
6
ஆகையால் என்னுடைய கடுங்கோபம் ஊற்றப்பட்டது. அது யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்து, அவைகளை இன்று இருப்பதுபோல் வெறும் பாழிடமாய் ஆக்கியிருக்கிறது.
7
“இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுகிறதாவது: ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் யூதாவிலிருந்து அகற்றி, ஒருவரும் உங்களுக்கென மீதியாயிருக்கவிடாமல், இப்படியான பெரும் பேராபத்தை ஏன் உங்கள்மேல் கொண்டுவருகிறீர்கள்?
8
நீங்கள் குடியிருக்கும்படி வந்து சேர்ந்திருக்கும் எகிப்து நாட்டில் வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டி, உங்கள் கைகளின் செயல்களினால் ஏன் என்னைக் கோபமடையச் செய்கிறீர்கள்? உங்களையே நீங்கள் அழித்து, பூமியிலுள்ள எல்லா மக்கள் மத்தியிலும் நீங்கள் உங்களைச் சாபப்பொருளாகவும், பழிச்சொல்லாகவும் ஆக்குகிறீர்கள்.
9
நீங்கள் உங்கள் முற்பிதாக்களினாலும், யூதா நாட்டு அரசர்களினாலும், அரசிகளினாலும் செய்யப்பட்ட கொடுமைகளை மறந்துவிட்டீர்களா? நீங்களும், உங்கள் மனைவியரும் எருசலேமின் தெருக்களிலும், யூதா நாட்டிலும் செய்த கொடுமைகளை மறந்துவிட்டீர்களா?
10
இன்றுவரை அவர்கள் தங்களைத் தாழ்த்தவோ, பயபக்தியை காட்டவோ இல்லை. நான் உங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களுக்கும் முன்வைத்த என் சட்டங்களையும், விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றவுமில்லை.”
11
ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “உன்மீது பேராபத்தைக் கொண்டுவரும்படியும், யூதா உங்களில் ஒவ்வொருவனையும் அழிக்கும்படியும் நான் தீர்மானித்திருக்கிறேன்.
12
எகிப்தில் குடியிருக்கும்படி, அங்குதான் போவோம் என முடிவெடுத்த யூதாவின் மீதியானோரை நான் அகற்றிவிடுவேன். அவர்கள் யாவரும் எகிப்தில் அழிந்துபோவார்கள். அவர்கள் வாளினால் விழுந்தோ, பஞ்சத்தினால் இறந்துபோவார்கள். அவர்கள் சிறியோரிலிருந்து பெரியோர்வரை வாளினால் அல்லது பஞ்சத்தினால் அழிவார்கள். அவர்கள் சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், கண்டனத்திற்கும், பழிச்சொல்லுக்கும் ஆளாவார்கள்.
13
நான் எருசலேமை தண்டித்ததுபோல எகிப்தில் குடியிருப்பவர்களையும் வாளினாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன்.
14
எகிப்தில் குடியிருக்கப்போன யூதாவில் மீதமுள்ளோர் யாரும் யூதா நாட்டுக்குத் திரும்பிவர தப்பியோ, பிழைத்தோ இருக்கமாட்டார்கள். அங்கு திரும்பிவந்து வாழவேண்டுமென்ற வாஞ்சை அவர்களுக்கு இருந்துங்கூட, ஒருசில அகதிகளைத்தவிர வேறு ஒருவரும் திரும்பமாட்டார்கள்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options