எரேமியா 32:16-25
16
“நான் பத்திரத்தை நேரியாவின் மகனான பாரூக்கிடம் கொடுத்தபின் யெகோவாவிடம் மன்றாடினேன்.
17
“ஆண்டவராகிய யெகோவாவே, நீர் உமது மகா வல்லமையினாலும், நீட்டப்பட்ட கரத்தினாலும் வானங்களையும், பூமியையும் உருவாக்கினீர். உம்மால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமேயில்லை.
18
நீர் ஆயிரக்கணக்கானோருக்கு அன்பு காட்டுகிறீர். ஆனால் பெற்றோரின் பாவங்களுக்கான தண்டனையை அவர்களுக்குப்பின் அவர்களின் பிள்ளைகளின் மடியில் கொண்டுவருகிறீர். பெரியவரும், வல்லமையுள்ளவருமான இறைவனே, சேனைகளின் யெகோவா என்பது உமது பெயர்.
19
உமது நோக்கங்கள் பெரியவை. உமது செயல்கள் வல்லமையுள்ளவை. மனிதருடைய வழிகளையெல்லாம் உமது கண்கள் காண்கின்றன. அவனவனுடைய நடத்தைக்குத் தக்கதாகவும், அவனவனுடைய செயல்களுக்குத் தக்கதாகவும் ஒவ்வொருவருக்கும் நீர் பலன் அளிக்கிறீர்.
20
நீர் எகிப்திலே அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தீர். இஸ்ரயேலருக்கும், மற்ற எல்லா மனுமக்களுக்கும் மத்தியில் தொடர்ந்து இன்றுவரை அவைகளை நடப்பித்திருக்கிறீர். இன்னும் உமக்கே உரியதாய் இருக்கும் புகழையும் பெற்றிருக்கிறீர்.
21
நீர் உமது மக்களான இஸ்ரயேலரை அடையாளங்களுடனும், அதிசயங்களுடனும் எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர். உமது வல்லமையுள்ள கையினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும் பெரிய பயங்கரத்தினாலும் அதைச் செய்தீர்.
22
அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த பாலும் தேனும் ஓடுகிறதான இந்த நாட்டையும் நீரே அவர்களுக்குக் கொடுத்தீர்.
23
அவர்கள் வந்து அதைத் தங்களுக்கு உரிமையாக்கிக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் உமக்குக் கீழ்ப்படியவோ, உமது சட்டத்தைப் பின்பற்றவோ இல்லை. நீர் அவர்களுக்குக் கட்டளையிட்டபடி செய்யவும் இல்லை. ஆகையினால் நீர் அவர்கள்மீது இந்த பேராபத்தையெல்லாம் கொண்டுவந்தீர்.
24
“பட்டணத்தைக் கைப்பற்றுவதற்காக எப்படியாக முற்றுகைக் கொத்தளங்கள் கட்டப்பட்டுள்ளன என்று பாரும். வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றின் நிமித்தம் இப்பட்டணம் அதைத் தாக்கிக்கொண்டிருக்கிற பாபிலோனியரிடம் கொடுக்கப்படும். நீர் இப்போது காண்கிறதுபோல நீர் சொன்னது நடந்திருக்கிறது.
25
ஆண்டவராகிய யெகோவாவே! இப்பட்டணம் பாபிலோனியரிடம் கையளிக்கப்பட இருக்கிறபோதிலும், நீர் என்னிடம், ‘வெள்ளியைக் கொடுத்து வயலை வாங்கி, அதன் ஆவணங்களைச் சாட்சிப்படுத்து என்று சொல்கிறீரே’ என்று மன்றாடினேன்.”
Settings