Skip to content
2 நாளாகமம் 30:1-9

2 நாளாகமம் 30:1-9

1
எசேக்கியா எல்லா இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் ஆட்களை அனுப்பினான், அத்துடன் எப்பிராயீமுக்கும், மனாசேக்கும் கடிதங்களையும் எழுதினான். அதில் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாடுவதற்கு எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தான்.
2
அரசனும், அவனுடைய அதிகாரிகளும், எருசலேமிலுள்ள சபையோர் எல்லோரும் இரண்டாம் மாதத்தில் பஸ்காவைக் கொண்டாட தீர்மானித்திருந்தார்கள்.
3
ஏனெனில் தேவையான அளவு ஆசாரியர்கள் தங்களைச் சுத்திகரிக்காமலும், எருசலேமில் மக்கள் கூடிவராமலும் இருந்ததினால், அவர்களால் வழக்கமாகப் பஸ்காவைக் கொண்டாடும் முதலாம் மாதத்தில் அதைக் கொண்டாட முடியவில்லை.
4
இத்திட்டம் அரசனுக்கும், கூடியிருந்த எல்லோருக்கும் சரியானதாகக் காணப்பட்டது.
5
அவர்கள் இஸ்ரயேல் முழுவதிலும் பெயெர்செபா தொடங்கி தாண்வரைக்கும் உள்ள மக்களை, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாட எருசலேமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கும்படித் தீர்மானித்தார்கள். நீண்டகாலமாக எழுதப்பட்டிருந்தபடி பெருந்தொகையான மக்களால் பஸ்கா கொண்டாடப்படவில்லை.
6
அரசனும், அவனுடைய அதிகாரிகளும் அனுப்பிய கடிதங்களை அரசனின் கட்டளைப்படி தூதுவர்கள் இஸ்ரயேல், யூதா எங்கும் கொண்டுபோனார்கள். அதில், “இஸ்ரயேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் ஆகியோரின் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள். அப்பொழுது அவரும் அசீரிய அரசனின் கைக்கு தப்பி, மீந்திருக்கிற உங்களிடம் திரும்புவார்.
7
உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாயிருந்த உங்கள் முற்பிதாக்களைப் போலவும், சகோதரரைப் போலவும் நீங்களும் இருக்கவேண்டாம். அதனால் நீங்கள் காண்பதுபோல், அவர் அவர்களை பயங்கரமான காட்சிப் பொருளாக்கியிருக்கிறார்.
8
நீங்கள் உங்கள் முற்பிதாக்கள் இருந்ததுபோல் அடங்காதவர்களாக இருக்கவேண்டாம்; யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள். என்றென்றைக்குமென அவர் பரிசுத்தப்படுத்திய பரிசுத்த இடத்திற்கு வாருங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது அவரது கடுங்கோபம் உங்களைவிட்டு நீங்கும்.
9
நீங்கள் யெகோவாவினிடத்திற்குத் திரும்பினால், அப்பொழுது உங்கள் சகோதரர்களும், உங்கள் பிள்ளைகளும் அவர்களைச் சிறைபிடித்தவர்களிடத்தில் தயவு பெற்று திரும்பவும் இந்த நாட்டிற்கு வருவார்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவர். நீங்கள் அவரிடம் திரும்பும்போது உங்களிடமிருந்து அவர் தன் முகத்தைத் திருப்பமாட்டார்” என எழுதப்பட்டிருந்தது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options