Skip to content
1 இராஜாக்கள் 4:7-28

1 இராஜாக்கள் 4:7-28

7
முழு இஸ்ரயேலருக்கும் மேலாக சாலொமோன் பன்னிரண்டு மாவட்ட ஆளுநர்களை நியமித்திருந்தான். இவர்கள் அரசனுக்கும், அரச குடும்பத்தாருக்கும் உணவு விநியோகம் செய்தார்கள். ஒரு வருடத்தில் ஒரு மாதத்திற்குத் தேவையான உணவை மாதத்திற்கு ஒருவராக விநியோகம் செய்ய வேண்டியிருந்தது.
8
அவர்களுடைய பெயர்களாவன: பென்கர், எப்பிராயீம் மலைநாட்டின் ஆளுநர்.
9
பென் தேக்கேர், மாகாஸிலுள்ள சால்பீம், பெத்ஷிமேஷ், ஏலோன் பெத்கனான் ஆகிய இடங்களுக்கு ஆளுநர்.
10
பென் கெசெத், அருபோத்திற்கு ஆளுநனாய் இருந்தான். இதில் சோக்கோவும் எப்பேர் நிலங்களும் அடங்கியிருந்தன.
11
பென் அபினதாப், நாபோத் தோருக்கு ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் தாபாத்தைத் திருமணம் செய்திருந்தான்.
12
அகிலூதின் மகன் பானா, இவன் தானாக், மெகிதோ, பெத்ஷான் முழுவதையும் ஆளுகை செய்தான். பெத்ஷான் சரேத்தானுக்கு அடுத்து யெஸ்ரயேலுக்குக் கீழே இருந்தது. பானாவின் பகுதி பெத்ஷான் தொடங்கி ஆபேல் மெகொலாவுக்குப்போய் யக்மெயாமில் முடிந்தது.
13
பென் கேபேர், ராமோத் கீலேயாத்தில் ஆளுநர். இந்தப் பகுதியில் கீலேயாத்திலுள்ள மனாசேயின் மகனான யாவீரின் குடியிருப்புகளோடு பாசானிலுள்ள அர்கோப்பின் பகுதிகளும், அதைவிட மதிலால் சூழப்பட்ட வெண்கல தாழ்ப்பாள்களையுடைய அறுபது பட்டணங்களும் அடங்கியிருந்தன.
14
இத்தோவின் மகன் அகினதாப், மக்னாயீமின் ஆளுநர்.
15
அகிமாஸ், நப்தலியின் ஆளுநர். அவன் சாலொமோனின் மகள் பஸ்மாத்தைத் திருமணம் செய்திருந்தான்.
16
ஊஷாயின் மகன் பானா என்பவன் ஆசேர், ஆலோத் ஆகியவற்றின் ஆளுநர்.
17
பருவாவின் மகன் யோசபாத், இசக்காரில் ஆளுநர்.
18
ஏலாவின் மகன் சீமேயி, பென்யமீனின் ஆளுநர்.
19
ஊரின் மகன் கேபேர், கீலேயாத்தின் ஆளுநர். எமோரியரின் அரசனான சீகோனின் எல்லைகளும், பாசானின் அரசனான ஓகுவின் எல்லைகளும் இதில் அடங்கியிருந்தன. அந்த மாவட்டத்திற்கு அவன் ஒருவனே ஆளுநனாய் இருந்தான்.
20
யூதாவின், இஸ்ரயேலின் மக்கள் கடற்கரை மணலைப்போல் எண்ணிக்கையில் பெருகியிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு, குடித்து சந்தோஷமாய் இருந்தார்கள்.
21
சாலொமோன் அரசன் யூப்ரட்டீஸ் நதி தொடக்கம் எகிப்தின் எல்லைவரை இருந்த பெலிஸ்தியரின் நாடுவரையுள்ள இடங்களையும், ஆட்சிப் பகுதியையும் ஆண்டு வந்தான். இந்த நாடுகள் சாலொமோனுக்கு வரி செலுத்தி அவனுடைய வாழ்நாளெல்லாம் அவனுக்குக் கீழ்ப்பட்டனவாகவே இருந்தன.
22
சாலொமோனுக்குத் தினமும் தேவைப்பட்ட உணவுப் பொருட்கள்: முப்பது கோர் சிறந்த மாவும், அறுபது கோர் மாவும்,
23
தொழுவத்தில் பராமரிக்கப்பட்ட பத்து மாடுகளும், இருபது பசும்புல் மேய்ந்த மாடுகளும், நூறு செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், அத்துடன் மான்களும், சிறு மான்களும், கலைமான்களும், திறமான கொழுத்த கோழிகளும் ஆகும்.
24
ஏனெனில் அவனின் ஆட்சி யூப்ரட்டீஸ் நதிக்கு மேற்கே திப்சாவிலிருந்து, காசாவரை இருந்த எல்லா இடத்திலும் பரந்திருந்தது. நாட்டில் எங்கும் சமாதானம் நிலவியது.
25
சாலொமோனின் வாழ்நாள் முழுவதும், தாணிலிருந்து பெயெர்செபா வரை இஸ்ரயேலிலும், யூதாவிலும் வாழ்ந்த மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்துவந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்குச் சொந்தமான திராட்சைக் கொடிகளுக்கும், அத்தி மரங்களுக்கும் கீழே வாழ்ந்தனர்.
26
சாலொமோனிடம் தேரில் பூட்டும் குதிரைகளுக்கு நாலாயிரம் தொழுவங்களும், பன்னிரெண்டாயிரம் குதிரைகளும் இருந்தன.
27
மாவட்ட அதிகாரிகள் ஒவ்வொருவரும் தமக்குரிய மாதத்தில் சாலொமோன் அரசனுக்கும், அரசனின் மேஜைக்கு வரும் எல்லோருக்கும் தேவையான உணவை விநியோகம் செய்தனர். ஒன்றும் குறைவுபடாதவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்.
28
அத்துடன் அவர்கள் தொழுவத்திலுள்ள அரசனுடைய தேர் குதிரைகளுக்கும், மற்றும் குதிரைகளுக்கும், வாற்கோதுமையையும், வைக்கோலையும் நியமிக்கப்பட்ட அளவை அவற்றிற்குரிய இடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options