1 இராஜாக்கள் 14:21-30
21
சாலொமோனின் மகனான ரெகொபெயாம் யூதாவில் அரசனாயிருந்தான். அவன் அரசனாகும்போது அவனுக்கு நாற்பத்தொரு வயதாயிருந்தது. யெகோவா தனது பெயர் விளங்கும்படி இஸ்ரயேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து தெரிந்துகொண்ட பட்டணமான எருசலேமில் பதினேழு வருடங்கள் அரசாண்டான். அம்மோனியப் பெண்ணான அவன் தாயின் பெயர் நாமாள்.
22
யூதா கோத்திரத்தார் யெகோவாவின் பார்வையில் தீமையானதையே செய்துவந்தார்கள். தாங்கள் செய்த பாவங்களினால் தங்கள் முன்னோர் செய்ததைக் காட்டிலும் யெகோவாவை அதிகமாகக் கோபமூட்டினார்கள்.
23
உயர்ந்த ஒவ்வொரு மலையின்மேலும், ஒவ்வொரு செழிப்பான மரத்தின் கீழும் மேடைகளையும், புனிதக் கற்களையும், அசேரா விக்கிரக தூண்களையும் தங்களுக்கு அமைத்துக்கொண்டார்கள்.
24
நாட்டின் வழிபாட்டிடங்களில் வேசித்தனத்திற்கு தங்களைக் கொடுக்கும் ஆண் விபசாரக்காரரும் இருந்தார்கள். இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்தியிருந்த ஜனங்களின் அருவருக்கத்தக்க பழக்கங்களில் மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
25
ரெகொபெயாமின் ஆட்சியின் ஐந்தாம் வருடம் எகிப்திய அரசனான சீஷாக் எருசலேமைத் தாக்கினான்.
26
அவன் யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனையிலும் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடிக் கொண்டுபோனான். சாலொமோன் செய்துவைத்திருந்த எல்லா தங்கக் கேடயங்கள் உட்பட அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான்.
27
எனவே அரசன் ரெகொபெயாம் அவற்றிற்குப் பதிலாக வெண்கல கேடயங்களைச் செய்து, அரச அரண்மனை வாசல் காவலர்களின் தளபதிகளிடம் ஒப்படைத்தான்.
28
யெகோவாவின் ஆலயத்திற்கு அரசன் போகும்போதெல்லாம், அந்தக் காவலர் கேடயங்களைச் சுமந்துகொண்டுபோய், திரும்பவும் அவற்றைக் காவலறைக்குள் கொண்டுவந்து வைப்பார்கள்.
29
ரெகொபெயாமின் ஆட்சிக் காலத்தின் மற்ற சம்பவங்களும், அவன் செய்த அனைத்தும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன.
30
ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் இடையில் தொடர்ந்து யுத்தம் நடந்து கொண்டேயிருந்தது.
Settings