சகரியா13
Listen to this chapter
0:00
0:00
1
“அந்த நாளிலே தாவீதின் குடும்பத்தினருக்காகவும் எருசலேமின், குடிமக்களுக்காகவும் ஊற்றொன்று திறக்கப்படும். அது அவர்களைப் பாவத்திலிருந்தும், அசுத்தத்திலிருந்தும் கழுவி சுத்திகரிக்கும்.
2
“அந்த நாளில், நான் நாட்டிலிருந்து விக்கிரங்களின் பெயரை அகற்றிவிடுவேன், அவை இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை” என சேனைகளின் யெகோவா கூறுகிறார். “பொய் தீர்க்கதரிசிகளையும், அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து நீக்குவேன்.
3
இனி ஒருவன் பொய் தீர்க்கதரிசனம் சொல்வானாகில், அவனைப் பெற்ற தாய் தகப்பன் அவனிடம், ‘நீ யெகோவாவின் பெயரில் பொய் சொன்னாய். ஆதலால் நீ சாகவேண்டும்’ என அவனுக்குச் சொல்வார்கள். அவன் தீர்க்கதரிசனம் சொல்லும்போதோ, அவனுடைய பெற்றோர்கள் அவனைக் கத்தியால் குத்துவார்கள்.
4
“அந்த நாளில் பொய் தீர்க்கதரிசி ஒவ்வொருவனும், தன்னுடைய தரிசனங்களைக்குறித்து வெட்கமடைவான், அதனால் அவன் மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு இறைவாக்கு உரைப்போருக்குரிய ஆட்டு மயிர் உடையை உடுத்தமாட்டான்.
5
அவனோ, ‘நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல, நான் ஒரு விவசாயி; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான்.’
6
ஒருவன் அவனிடம், ‘உன் உடலில் இந்தக் காயங்கள் எப்படி உண்டாயின?’ எனக் கேட்டால், அதற்கு அவன், ‘என் நண்பர்களின் வீட்டிலே நான் பட்ட காயங்கள்’ என்பான்.
7
“வாளே, என் மேய்ப்பனுக்கு எதிராக விழித்தெழு, எனக்கு நெருங்கிய மனிதனுக்கு எதிராய் விழித்தெழு!” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “மேய்ப்பனை அடி; செம்மறியாடுகளும் சிதறடிக்கப்படும். நானோ அதின் குட்டிகளுக்கு எதிராக என் கையைத் திருப்புவேன்.
8
நாடு முழுவதிலும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெட்டுண்டு அழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். எனினும், “மூன்றில் ஒரு பங்கு மீதியாய் அதில் விடப்படும்.
9
இந்த மூன்றில் ஒரு பங்கையும் நான் நெருப்புக்குள் கொண்டுவருவேன், வெள்ளியைப்போல் அவர்களைச் சுத்தமாக்கி, தங்கத்தைப்போல் அவர்களைச் சோதிப்பேன். அவர்கள் என் பெயரைச்சொல்லிக் கூப்பிடுவார்கள். நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன். நான், ‘இவர்கள் என் மக்கள்,’ என்பேன். அவர்களும், ‘யெகோவாவே எங்கள் இறைவன்’ என்பார்கள்.”
Use ← → arrow keys to navigate
Settings
Reading Style
Typeface
Font Size px
Options
Study Note