உள்ளடக்கத்திற்குச் செல்க

Uncleanness பற்றிய பைபிள் வசனங்கள்

38 வசனங்கள் · 1 அம்சம்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “ ‘அசுத்தமான காட்டு மிருகங்கள், அசுத்தமான வீட்டு மிருகங்கள், தரையில் வாழும் அசுத்தமான பிராணிகள் ஆகியவற்றின் உயிரற்ற உடல்களை தொடுகிறவன் எவனும் அதை அறியாதிருந்தாலும், அவன் அசுத்தமாகி, குற்றவாளியாகிறான்.

  2. அல்லது எந்த அசுத்தத்தினாலாவது தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் தொட்டால், அவன் அதை அறியாதிருந்தாலும், அவன் அதை அறிந்துகொள்ளுகிறபோது குற்றவாளியாவான்.

  3. ஆனால் யெகோவாவுக்குச் சொந்தமான சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும், அசுத்தமாயிருக்கிற யாராவது சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.

  4. மனித அசுத்தத்தையோ அல்லது அசுத்த மிருகத்தையோ அல்லது அசுத்தமும் அருவருப்புமான ஏதாகிலும் பொருளையோ, இவ்வாறான அசுத்தமான எதையாவது ஒருவன் தொட்டு, பின்பு யெகோவாவுக்குரிய சமாதான காணிக்கையின் இறைச்சியைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும் என்றார்.’ ”

  5. “ ‘தன் நாட்டினனோ அல்லது பிறநாட்டினனோ, இறந்துகிடக்கக் காணப்பட்டதை அல்லது காட்டு மிருகங்களால் கிழிக்கப்பட்டுச் செத்ததை ஒருவன் சாப்பிட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் சம்பிரதாய முறைப்படி மாலைவரை அசுத்தமானவன். அதன்பின் அவன் சுத்தமாவான்.

  6. யெகோவா மோசேயிடம், “ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆசாரியனானவன் தன் மக்களில் சாகும் யாருக்காகவும் சம்பிரதாயப்படி தன்னை அசுத்தமாக்கிக்கொள்ளக் கூடாது.

  7. நெருங்கிய உறவினரான தன் தகப்பன், தாய், தன் மகன், மகள், தன் சகோதரன் ஆகியோருக்காகத் தன்னை அசுத்தப்படுத்தலாம்.

  8. அல்லது கணவன் இல்லாத காரணத்தால் தன்னில் தங்கி வாழ்கின்ற, திருமணமாகாத தனது சகோதரிக்காகத் தன்னை அசுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

  9. திருமணத்தின்மூலம் தனக்கு உறவினரானோருக்காகத் தன்னை அசுத்தப்படுத்திக் கறைப்படுத்திக்கொள்ளக் கூடாது.

  10. “ ‘ஆசாரியர்கள் தங்கள் தலைகளை மொட்டையடிக்கவோ, தங்கள் தாடிகளின் ஓரத்தைக் கத்தரிக்கவோ, தங்கள் உடல்களைக் கீறிக்கொள்ளவோ கூடாது.

  11. அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பரிசுத்தமாய் இருக்கவேண்டும். தங்களுடைய இறைவனின் பெயருக்குத் தூய்மைக்கேடு உண்டாக்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் தங்கள் இறைவனின் உணவை நெருப்பினால் யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்துகிறபடியால், அவர்கள் பரிசுத்தமாயிருக்க வேண்டும்.

  12. “ ‘அவர்கள் வேசித்தனத்தால் கறைப்பட்ட பெண்களையோ அல்லது தங்கள் கணவர்களிடமிருந்து விவாகரத்துப் பெற்றவர்களையோ திருமணம் செய்யக்கூடாது. ஏனெனில் ஆசாரியர்கள் தங்கள் இறைவனுக்குப் பரிசுத்தமானவர்கள்.

  13. ஆசாரியர்கள் உங்கள் இறைவனின் உணவைப் பலியாகச் செலுத்துகிறபடியால், அவர்களைப் பரிசுத்தமானவர்களாக மதியுங்கள். உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவாவாகிய நான் பரிசுத்தராய் இருக்கிறபடியால், அவர்களையும் பரிசுத்தமானவர்களாக எண்ணிக்கொள்ளுங்கள்.

  14. “ ‘ஒரு ஆசாரியனின் மகள் வேசியாகி அதினால் தன்னைக் கறைப்படுத்தினால், அவள் தன் தகப்பனை அவமானப்படுத்துகிறாள். அவள் நெருப்பிலே எரிக்கப்படவேண்டும்.

  15. “ ‘தன் சகோதரர்கள் மத்தியில் தன் தலையின்மேல் அபிஷேக எண்ணெய் ஊற்றப்பட்டவனும், ஆசாரியனுக்கான உடைகளை அணிவதற்கு நியமிக்கப்பட்டவனுமான தலைமை ஆசாரியன் தன் தலைமயிரைக் குலைக்கவோ, தன் உடைகளைக் கிழிக்கவோ கூடாது.

  16. அவன் ஒரு இறந்த உடல் கிடக்கும் இடத்திற்குப் போகக்கூடாது. அவனுடைய தகப்பனோ, தாயோ இறந்தாலும் அவன் தன்னை அசுத்தப்படுத்தக் கூடாது.

  17. அவன் தன் இறைவனின் பரிசுத்த இடத்தைவிட்டுப் புறப்படவோ, அதைத் தூய்மைக்கேடாக்கவோ கூடாது. ஏனெனில் அவன் தன் இறைவனின் அபிஷேக எண்ணெயால் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறான். நானே யெகோவா.

  18. “ ‘தலைமை ஆசாரியன் திருமணம் செய்யும் பெண், ஒரு கன்னிகையாகவே இருக்கவேண்டும்.

  19. அவன் ஒரு விதவையையோ, விவாகரத்து செய்யப்பட்டவளையோ, வேசித்தனத்தினால் கறைப்பட்ட ஒரு பெண்ணையோ திருமணம் செய்யக்கூடாது. தன் சொந்த மக்கள் மத்தியில் உள்ள கன்னிகையை மட்டுமே திருமணம் செய்யவேண்டும்.

  20. இவ்வாறாக அவன் தன் மக்கள் மத்தியில் தன் சந்ததிகளை மாசுப்படுத்தாமல் இருக்கவேண்டும். அவனைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா நானே’ ” என்றார்.

  21. “நீ ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும், இஸ்ரயேலர் எனக்கு அர்ப்பணிக்கும் பரிசுத்த காணிக்கைகளை மதித்து நடக்கும்படிச் சொல். இவ்விதமாய் அவர்கள் என் பரிசுத்த பெயருக்குத் தூய்மைக்கேடு உண்டாக்காமல் இருப்பார்கள். நானே யெகோவா.

  22. “நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: தலைமுறைதோறும் உன் சந்ததிகளில் எவனும், சம்பிரதாயப்படி அசுத்தமாய் இருந்தும், இஸ்ரயேலர் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும் பரிசுத்த காணிக்கைக்குச் சமீபமாய் வருவானாகில், அவன் என் சமுகத்திலிருந்து அகற்றப்படவேண்டும். நானே யெகோவா.

  23. “ ‘ஆரோனின் சந்ததிகளில் யாராவது, தொற்றும் தோல்வியாதி உள்ளவனாகவோ, உடல் கசிவு உள்ளவனாகவோ இருந்தால், அவன் சுத்திகரிக்கப்படும்வரை பரிசுத்த காணிக்கைகளை சாப்பிடக்கூடாது. சடலத்தால் கறைபட்ட ஏதாவதொன்றைத் தொடுவதினாலும், விந்து கசிவுள்ள ஒருவனைத் தொடுவதினாலும் அவன் அசுத்தமாயிருப்பான்.

  24. அவன் தன்னை அசுத்தப்படுத்தக்கூடிய ஊரும்பிராணி ஒன்றைத் தொடுவதினாலும், எவ்வித அசுத்தத்தினாலும் தன்னை அசுத்தப்படுத்துகிற எவனையாவது தொடுவதினாலும் அசுத்தமாயிருப்பான்.

  25. இப்படிப்பட்ட எதையும் தொடுபவன் மாலைவரை அசுத்தமாயிருப்பான். அவன் தான் தண்ணீரில் முழுகினாலொழிய பரிசுத்த காணிக்கை எதையும் சாப்பிடக்கூடாது.