சங்கீதம் 73:1-17
1
ஆசாபின் சங்கீதம். நிச்சயமாகவே, இருதயத்தில் சுத்தமுள்ள இஸ்ரயேலருக்கு, இறைவன் நல்லவராயிருக்கிறார்.
2
ஆனால் நானோ, என் கால்கள் சறுக்கி, என் காலடிகள் இடறி விழப்போனேன்.
3
பெருமையுள்ளவர்களைக் குறித்துப் பொறாமை கொண்டேன்; கொடியவர்களின் வளமான வாழ்வை நான் கண்டேன்.
4
அவர்களுக்கு சாகும்வரை வேதனைகளே இல்லை; அவர்களுடைய உடல்கள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கின்றன.
5
அவர்கள் சாதாரண மனிதர்களைப்போல துன்பப்படுவதில்லை; மனிதருக்கு வரும் நோய்களினாலும் அவர்கள் பீடிக்கப்படுவதில்லை.
6
ஆதலால் பெருமை அவர்களுடைய கழுத்துச் சங்கிலியாய் இருக்கிறது; அவர்கள் வன்முறையை உடையாகக் கொண்டிருக்கிறார்கள்.
7
அவர்களுடைய இருதயம் கொழுப்பினால் புடைத்து அநியாயம் வெளியே வருகிறது; அவர்கள் மனதிலிருந்து எழும் தீமையான எண்ணங்களுக்கு அளவேயில்லை.
8
அவர்கள் ஏளனம் செய்து, தீமையானதைப் பேசுகிறார்கள்; அகங்காரத்தில் ஒடுக்கப்போவதாகப் பயமுறுத்துகிறார்கள்.
9
அவர்களுடைய வாயின் வார்த்தைகள் வானமட்டும் எட்டுகிறது; அவர்களுடைய நாவின் சொற்கள் பூமியெங்கும் சுற்றித்திரிகிறது.
10
ஆகையால் மக்களும் அவர்களிடமாய்த் திரும்பி, அவர்களின் சொற்களைத் தண்ணீரைப்போல் குடிக்கிறார்கள்.
11
அவர்கள், “இறைவன் எப்படி அறிவார்? மகா உன்னதமானவருக்கு இவற்றைப் பற்றிய அறிவு உண்டோ?” என்கிறார்கள்.
12
கொடியவர்கள் எப்பொழுதும் சிந்தனை அற்றவர்களாகவும், செல்வத்தினால் பெருகுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
13
உண்மையில், நான் வீணாகவே என் இருதயத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டேன்; வீணாகவே குற்றமற்றவனாய் என் கைகளைக் கழுவிக் கொண்டேன்.
14
நாளெல்லாம் நான் பாதிக்கப்பட்டேன்; காலைதோறும் நான் கண்டிக்கப்பட்டேன்.
15
இவ்வாறு பேசியிருந்தால், நான் உமது பிள்ளைகளுக்கு துரோகம் செய்திருப்பேன்.
16
இவற்றையெல்லாம் விளங்கிக்கொள்ள நான் முயன்றபோது, அது எனக்குக் கடினமாய் இருந்தது.
17
ஆனால் நான் இறைவனின் பரிசுத்த இடத்திற்குள் நுழைந்த பின்புதான், நான் அவர்களுடைய இறுதிமுடிவை அறிந்துகொண்டேன்.
Settings