லேவியராகமம் 7:11-36
11
“ ‘ஒருவன் யெகோவாவுக்குக் கொடுக்கும் சமாதான காணிக்கையின் ஒழுங்குமுறைகள் இவையே:
12
“ ‘அவன் தன் நன்றியுணர்வை வெளிப்படுத்த அதைச் செலுத்துவானாகில், இந்த நன்றிக் காணிக்கையுடன், புளிப்பில்லாமல் எண்ணெயில் பிசைந்து செய்யப்பட்ட அடை அப்பங்களையும், புளிப்பில்லாமல் செய்யப்பட்டு எண்ணெய் தடவப்பட்ட அதிரசங்களையும், சிறந்த மாவுடன் எண்ணெய் கலந்து நன்கு பிசைந்து சுடப்பட்ட அடைகளையும் அவன் செலுத்தவேண்டும்.
13
நன்றி செலுத்துவதற்கான தன் சமாதான காணிக்கையுடன், புளிப்பூட்டிச் சுடப்பட்ட அடை அப்பங்களையும் அவன் காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
14
அவன் ஒவ்வொரு வகையான அப்பத்திலும் ஒவ்வொன்றை யெகோவாவுக்கு அன்பளிப்பான காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். சமாதான காணிக்கையின் இரத்தத்தைத் தெளிக்கும் ஆசாரியருக்கே இது உரியது.
15
நன்றி செலுத்தும் சமாதான காணிக்கையின் இறைச்சியானது அது செலுத்தப்பட்ட நாளிலேயே, சாப்பிடப்பட வேண்டும். அவன் அதில் ஒன்றையும் காலைவரை விட்டுவைக்கக்கூடாது.
16
“ ‘எனினும், அவனுடைய காணிக்கை ஒரு நேர்த்திக்கடனாகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கையாகவோ இருந்தால், அவன் பலிசெலுத்தும் நாளிலேயே அதைச் சாப்பிடவேண்டும். ஆனால் ஏதாவது மீதமிருந்தால் அடுத்தநாள் சாப்பிடலாம்.
17
ஆனாலும், மூன்றாம் நாள்வரை விட்டுவைக்கப்பட்ட பலியின் இறைச்சி எதுவும் எரிக்கப்படவேண்டும்.
18
சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும் மூன்றாம் நாளில் சாப்பிட்டால், அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அது காணிக்கை செலுத்துபவருக்கு பலனளிக்காது. ஏனெனில், அது அசுத்தமானது. அதில் எதையாவது சாப்பிடுபவன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாவான்.
19
“ ‘சம்பிரதாய முறைப்படி அசுத்தமாக எண்ணப்படும் எதிலாவது இறைச்சி பட்டுவிட்டால், அந்த இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அது எரிக்கப்படவேண்டும். மற்ற இறைச்சியைப் பொறுத்தமட்டில், அதை சம்பிரதாய முறைப்படி சுத்தமாய் இருப்பவன் எவனும் சாப்பிடலாம்.
20
ஆனால் யெகோவாவுக்குச் சொந்தமான சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும், அசுத்தமாயிருக்கிற யாராவது சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
21
மனித அசுத்தத்தையோ அல்லது அசுத்த மிருகத்தையோ அல்லது அசுத்தமும் அருவருப்புமான ஏதாகிலும் பொருளையோ, இவ்வாறான அசுத்தமான எதையாவது ஒருவன் தொட்டு, பின்பு யெகோவாவுக்குரிய சமாதான காணிக்கையின் இறைச்சியைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும் என்றார்.’ ”
22
யெகோவா மோசேயிடம்,
23
“நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது, மாடுகளின் கொழுப்பையோ, செம்மறியாட்டின் கொழுப்பையோ, வெள்ளாட்டின் கொழுப்பையோ சாப்பிடவேண்டாம்.
24
செத்துக் கிடக்கக் காணப்பட்ட ஒரு மிருகத்தின் கொழுப்பையோ அல்லது காட்டு மிருகங்களால் கிழித்துப்போடப்பட்ட மிருகத்தின் கொழுப்பையோ வேறு ஏதாவது தேவைக்குப் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் அதைச் சாப்பிடக்கூடாது.
25
யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைக்கான மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடும் எவனும், தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
26
நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், பறவையின் இரத்தத்தையோ, மிருகத்தின் இரத்தத்தையோ சாப்பிடக்கூடாது.
27
யாராவது இரத்தத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.
28
யெகோவா மோசேயிடம்,
29
“நீ இஸ்ரயேலருக்கு சொல்லவேண்டியதாவது: யெகோவாவுக்குச் சமாதான காணிக்கை கொண்டுவரும் எவனும் அதன் ஒரு பங்கைத் தனது பலியாக யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.
30
நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கையைத் தன் சொந்தக் கைகளினாலேயே கொண்டுவர வேண்டும். அதன் நெஞ்சுப்பகுதியுடன் அதன் கொழுப்பையும் கொண்டுவந்து, நெஞ்சுப்பகுதியை யெகோவாவுக்குமுன் அசைவாட்டும் காணிக்கையாக, அசைவாட்டவேண்டும்.
31
ஆசாரியன் கொழுப்பை பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். ஆனால் நெஞ்சுப்பகுதியோ ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் உரியது.
32
நீங்கள் சமாதான காணிக்கை மிருகத்தின் வலது தொடையை ஆசாரியனுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கவேண்டும்.
33
சமாதான காணிக்கை மிருகத்தின் இரத்தத்தையும், கொழுப்பையும் செலுத்தும் ஆரோனின் மகன், மிருகத்தின் வலது தொடையை தனது பங்காக எடுக்கவேண்டும்.
34
இஸ்ரயேலரின் சமாதான காணிக்கையிலிருந்து அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், செலுத்தப்பட்ட தொடையையும் நான் எடுத்துக்கொண்டேன். நான் அவைகளை இஸ்ரயேலரிடமிருந்து ஆசாரியன் ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் நிரந்தரமான பங்காகக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.
35
நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கையின் இப்பங்கு, ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் ஒதுக்கப்பட்டது. அவர்கள் ஆசாரியர்களாக யெகோவாவுக்குப் பணிசெய்ய ஒப்புக்கொடுக்கப்பட்ட நாளிலேயே, இப்பங்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
36
அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த நாளிலே, “தலைமுறைதோறும் இஸ்ரயேலர் தங்களுடைய ஒழுங்கான பங்காக இதை ஆசாரியருக்குக் கொடுக்கவேண்டும்” என யெகோவா கட்டளையிட்டிருந்தார்.
Settings