நியாயாதிபதிகள் 1:21-36
21
ஆயினும் பென்யமீனியர் எருசலேமில் வாழ்ந்த எபூசியரை வெளியேற்றத் தவறிவிட்டனர். அதனால் இன்றுவரை எபூசியர் இன்னும் அங்கே பென்யமீனியருடன் வாழ்கின்றனர்.
22
இப்போது யோசேப்பு குடும்பத்தார் பெத்தேலைத் தாக்கினார்கள். யெகோவா அவர்களோடுகூட இருந்தார்.
23
அவர்கள் பெத்தேலுக்கு உளவுபார்க்க மனிதரை அனுப்பினார்கள். பெத்தேல் முற்காலத்தில் லூஸ் என்று அழைக்கப்பட்டது.
24
அப்போது உளவாளிகள் பட்டணத்திலிருந்து ஒரு மனிதன் வெளியேவருவதைக் கண்டு அவனிடம், “பட்டணத்திற்குள் எப்படிப் போவது என்று எங்களுக்கு காட்டு. அப்பொழுது உன்னை நன்றாய் நடத்துவோம்” என்றனர்.
25
எனவே அவன் அவர்களுக்கு வழிகாட்டினான். அவர்கள் அந்தப் பட்டணம் முழுவதையும் வாளுக்கு இரையாக்கினார்கள். ஆனால் அந்த மனிதனையும் அவனுடைய முழுக் குடும்பத்தையும் தப்பவிட்டார்கள்.
26
அதன்பின்பு அவன் ஏத்தியரின் நாட்டிற்குப்போய் அங்கே ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு, “லூஸ்” என்று பெயரிட்டான். அது இந்நாள்வரைக்கும் அந்தப் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
27
ஆனால் மனாசே கோத்திரம், பெத்ஷான், தானாக், தோர், இப்லேயாம், மெகிதோ ஆகிய இடங்களிலுள்ள மக்களையும், அத்துடன் அவற்றைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருக்கிற மக்களையும் துரத்திவிடவில்லை. ஏனெனில் கானானியரும் அந்த நாட்டிலேயே குடியிருப்பதற்கு உறுதிகொண்டிருந்தார்கள்.
28
ஆனால் இஸ்ரயேல் மக்கள் பெலன் கொண்டபோது, அவர்கள் கானானியரைத் தங்களுக்குக் கட்டாய வேலை செய்யும்படி நிர்பந்தப்படுத்தினார்கள். ஆயினும் அவர்களை முழுவதும் வெளியே துரத்திவிடவில்லை.
29
எப்பிராயீம் கோத்திரத்தாரும் கேசேரில் குடியிருந்த கானானியரை வெளியே துரத்திவிடவில்லை. எனவே கானானியரோ தொடர்ந்து அவர்களுடனே வாழ்ந்துவந்தார்கள்.
30
அத்துடன் செபுலோன் கோத்திரமும் கித்ரோனிலும் நாகலோனிலும் வாழ்ந்த கானானியரைத் துரத்திவிடவில்லை. கானானியர் செபுலோனியர் மத்தியில் வாழ்ந்தனர். அவர்களைக் கட்டாய வேலைசெய்ய கீழ்ப்படுத்தினர்.
31
ஆசேர் கோத்திரம் அக்கோ, சீதோன், அக்லாப், அக்சீப் எல்பா, ஆப்பெக், ரேகோப் பட்டணங்களில் வாழ்ந்தவர்களைத் துரத்திவிடவில்லை.
32
இதனால் ஆசேர் மக்கள் அந்த கானானிய குடிகளின் மத்தியில் வாழ்ந்தனர். ஏனெனில் அவர்களை ஆசேர் மக்கள் துரத்திவிடவில்லை.
33
நப்தலி கோத்திரம் பெத்ஷிமேஷிலும், பெத் ஆனாத்திலும் வாழ்ந்தவர்களைத் துரத்திவிடவில்லை. அதனால் நப்தலி கோத்திரம் அந்த நாட்டின் கானானிய குடிகளின் மத்தியில் வாழ்ந்தார்கள். பெத்ஷிமேஷிலும் பெத் ஆனாத்திலும் வாழ்ந்த கானானியர் அவர்களுக்குக் கட்டாய வேலைக்காரராயினர்.
34
எமோரியர் தாண் கோத்திரத்தை மலைநாட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருந்தனர். அவர்களைச் சமவெளிக்குவர அனுமதிக்கவில்லை.
35
எமோரியர் ஏரேஸ் மலையிலும், ஆயலோனிலும், சால்பீமிலும் தங்கள் நிலங்களை உறுதிப்படுத்தத் தீர்மானித்தனர். ஆயினும் யோசேப்பு குடும்பத்தின் பலம் அதிகரித்தபோது, எமோரியரும் கட்டாய வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
36
எமோரியரின் எல்லை அக்கராபீம் மேடுவரை சென்று, சேலாவரை போய் அதற்கு அப்பாலும் தொடர்கிறது.
Settings