Skip to content
எரேமியா 44:20-30

எரேமியா 44:20-30

20
அப்பொழுது எரேமியா, தனக்குப் பதில் கொடுத்த ஆண், பெண் உட்பட எல்லா மக்களிடமும்,
21
“யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் தெருக்களிலும், நீங்களும், உங்கள் தந்தையரும், உங்கள் அரசர்களும், உங்கள் அதிகாரிகளும், நாட்டு மக்களும் தூபங்காட்டியதைப் பற்றி யெகோவா தெரியாமலிருந்தாரா?
22
உங்கள் கொடிய செயல்களையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும் யெகோவாவினால் சகிக்க முடியாமல் போயிற்று. அதனால்தான் யெகோவா உங்கள் நாட்டை இன்று இருப்பதுபோல் குடியில்லாமல் பாழடையச் செய்து, சாபத்திற்குள்ளாக்கினார்.
23
நீங்கள் தூபங்காட்டி, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தீர்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய சட்டங்களையோ அவரது ஒழுங்குவிதிகளையோ அவர் சொன்னவற்றையோ கைக்கொள்ளாமலும் விட்டீர்கள். ஆகையால் இன்று நீங்கள் காணும் பேராபத்து உங்கள்மேல் வந்திருக்கிறது” என்றான்.
24
மேலும் எரேமியா, பெண்கள் உட்பட எல்லா மக்களையும் பார்த்து, “எகிப்திலிருக்கும் மக்களே! யூதாவிலிருக்கும் மக்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
25
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுகிறதாவது: ‘வான அரசிக்குத் தூபங்காட்டவும், பானபலிகளை வார்க்கவும், நாங்கள் செய்த வாக்கை நிச்சயமாக நிறைவேற்றுவோம்’ என்று நீங்களும், உங்கள் மனைவியரும் பொருத்தனை செய்தீர்கள். அதை உங்கள் செயல்களினால் காட்டியுமிருக்கிறீர்கள். “உங்கள் வாக்கை தொடர்ந்து செய்துகொண்டே இருங்கள். உங்கள் பொருத்தனைகளைக் கடைப்பிடியுங்கள்.
26
ஆனாலும் எகிப்தில் குடியிருக்கும் யூதா மக்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். ‘எனது மகத்தான பெயரால் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘யூதாவிலிருந்து வந்து எகிப்தில் எங்கேயாவது வாழும் ஒருவனாவது, இனியொருபோதும், “ஆண்டவராகிய யெகோவா இருப்பது நிச்சயம்போல்” என்று ஆணையிடவோ, எனது பெயரை கூப்பிடவோ மாட்டான்.
27
நான் அவர்களுக்கு நன்மையையல்ல; தீமையைச் செய்யவே காத்துக்கொண்டிருக்கிறேன். எகிப்தில் இருக்கும் யூதா மக்கள் அனைவரும் இல்லாமற்போகும்வரை வாளினாலும், பஞ்சத்தினாலும் அழிவார்கள்.
28
வாளுக்குத் தப்பி எகிப்து நாட்டிலிருந்து யூதா நாட்டுக்குத் திரும்புகிறவர்களோ மிகச் சிலராய் இருப்பார்கள். அப்பொழுது யூதாவில் மீதியாயிருந்து எகிப்தில் குடியிருக்கும்படி போன நீங்கள் அனைவரும், என்னுடைய வார்த்தையோ அல்லது உங்களுடைய வார்த்தையோ எது நிலைநிற்கும் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
29
“ ‘இந்த இடத்தில் நான் உங்களைத் தண்டிப்பேன் என்பதற்கு உங்களுக்கு நான் ஒரு அடையாளத்தைத் தருகிறேன்’ என்று யெகோவா கூறுகிறார். ‘நான் உங்களுக்கு எதிராகப் பயமுறுத்திச் சொன்ன வார்த்தைகள் நிச்சயமாக நிறைவேறும் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்.’
30
நான் உங்களுக்குக் கொடுக்கும் அடையாளம் இதுவே என்று யெகோவா சொல்கிறதாவது: ‘எகிப்திய அரசன் பார்வோன் ஓப்ராவை, அவனைக் கொல்லத் தேடுகிற பகைவரின் கையில் ஒப்புக்கொடுப்பேன். அது யூதாவின் அரசனான சிதேக்கியாவை, அவனைக் கொல்லத் தேடிய பகைவனான பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கும்’ என்கிறார்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options