Skip to content
எரேமியா 4:19-31

தீர்க்கதரிசியின் வேதனையும் அகில நியாயத்தீர்ப்பும்

எரேமியா 4:19-31
19
ஆ, நான் வேதனைப்படுகிறேன், நான் வேதனைப்படுகிறேன்! என் வலியில் துடிக்கிறேன். என் இருதயம் தாங்கமுடியாத துயரமடைகிறது, என் இருதயம் எனக்குள் படபடக்கிறது, என்னால் அமைதியாயிருக்க முடியாது. ஏனெனில் நான் எக்காள சத்தத்தைக் கேட்டேன்; போர் முழக்கத்தையும் கேட்டேன்.
20
பேரழிவின் மேல் பேரழிவு தொடர்கிறது; நாடு முழுவதுமே அழிந்து கிடக்கிறது. நொடிப்பொழுதில் என் கூடாரங்கள் அழிந்தன. கணப்பொழுதில் என் புகலிடம் அழிந்தது.
21
நான் எவ்வளவு காலத்திற்கு போர்க் கொடியைப் பார்த்துக்கொண்டும், போரின் எக்காள தொனியைக் கேட்டுக்கொண்டும் இருக்கவேண்டும்?
22
“என் மக்கள் மூடர்கள், அவர்கள் என்னை அறியவில்லை. அவர்கள் உணர்வற்ற பிள்ளைகள்; அவர்களுக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லை. அவர்கள் தீமை செய்வதில் திறமைசாலிகள்; எப்படி நன்மை செய்வது என்று அவர்கள் அறியமாட்டார்கள்.”
23
நான் உலகத்தை உற்றுப் பார்த்தேன். அது உருவமற்று வெறுமையாயிருந்தது. வானங்களைப் பார்த்தேன். அவைகளின் வெளிச்சம் போய்விட்டது.
24
மலைகளை உற்றுப் பார்த்தேன். அவை நடுங்கிக் கொண்டிருந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்துகொண்டிருந்தன.
25
நான் உற்றுப் பார்த்தேன். அங்கு மக்கள் இருக்கவில்லை. ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துவிட்டன.
26
நான் உற்றுப் பார்த்தேன். செழிப்பான நாடு பாலைவனமாகிக் கிடந்தது. யெகோவாவுக்கு முன்பாக அவருடைய கடுங்கோபத்தினால் அதன் பட்டணங்கள் யாவும் பாழாகிக்கிடந்தன.
27
யெகோவா சொல்வது இதுவே: “நாடு முழுவதும் பாழாய்ப்போகும். ஆயினும் நான் அதை முற்றிலும் அழிக்கமாட்டேன்.
28
ஆகையால் பூமி துக்கங்கொள்ளும். மேலேயுள்ள வானங்கள் இருளடையும். ஏனெனில் நான் சொல்லிவிட்டேன், நான் மனம் மாறமாட்டேன்; நான் தீர்மானித்து விட்டேன், அதைச் செய்யாமல் விடவுமாட்டேன்.”
29
குதிரைவீரருடைய, வில் வீரருடைய சத்தம் கேட்டு ஒவ்வொரு பட்டணத்திலுள்ளவர்களும் தப்பி ஓடுகிறார்கள். சிலர் காடுகளுக்குள் ஓடுகிறார்கள்; சிலர் பாறைகளுக்கிடையே ஏறுகிறார்கள். எல்லாப் பட்டணங்களும் கைவிடப்பட்ட நிலையிலுள்ளன; ஒருவரும் அங்கு வசிக்கவில்லை.
30
பாழாய்ப் போனவளே! நீ என்ன செய்கிறாய்? இரத்தாம்பர உடையை அணிந்து தங்க ஆபரணங்களால் உன்னை அலங்கரிப்பது ஏன்? நீ உன் கண்களுக்கு மையிடுவது ஏன்? நீ வீணாகவே அலங்கரிக்கிறாய்; உன் காதலர் உன்னை வெறுத்து உன் உயிரை வாங்கத் தேடுகிறார்கள்.
31
பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணின் அழுகுரலைப் போலவும், தன் முதற்பிள்ளையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் வேதனைக் குரலைப் போலவும் ஒரு அழுகுரலைக் கேட்கிறேன். இளைத்து மூச்சு வாங்குகிற சீயோன் மகளின் அழுகுரலே அது. அவள் தன் கைகளை நீட்டி, “ஐயோ நான் மயக்கமடைகிறேன்; என் உயிர் கொலைகாரரிடம் கொடுக்கப்பட்டு விட்டது” என்கிறாள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options