Skip to content
எரேமியா 33:1-13

எரேமியா 33:1-13

1
எரேமியா இன்னும் காவற்கூடத்தின் முற்றத்திலேயே சிறைப்பட்டிருக்கும்போது, இரண்டாம் முறையும் யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்தது:
2
பூமியைப் படைத்து அதை உருவாக்கி நிறுத்தியவர் யெகோவா. யெகோவா என்பது அவரது பெயர். அவர் கூறுவது இதுவே:
3
நீ என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உனக்குப் பதிலளிப்பேன். நீ அறியாததும், உன்னால் ஆராய்ந்து அறிய முடியாததுமான பெரிய காரியங்களையும் நான் உனக்குச் சொல்லித்தருவேன்.
4
இப்பட்டணத்திலுள்ள வீடுகளைக் குறித்தும், யூதாவின் அரண்மனைகளைக் குறித்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவதாவது: இவற்றை நீங்கள் பாபிலோனியருடன் நடக்கும் சண்டையில் அவர்களுடைய வாளுக்கும், முற்றுகைக் கோட்டைகளுக்கும் எதிராகப் பயன்படுத்துவதற்காக உடைத்தீர்கள்.
5
பாபிலோனியரோ உள்ளே வருவார்கள். இந்த வீடுகளும், அரச அரண்மனைகளும் இறந்துபோன மனித உடல்களினால் நிரப்பப்படும். அவர்களை என்னுடைய கோபத்தினாலும், கடுங்கோபத்தினாலும் நானே கொல்லுவேன். இப்பட்டணத்தின் எல்லாக் கொடுமைகளினிமித்தம் நான் என் முகத்தை அதைவிட்டு மறைத்துக்கொள்வேன்.
6
ஆயினும், நான் இப்பட்டணத்திற்குச் சுகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் காலம் வரும். என்னுடைய மக்களை நான் குணப்படுத்தி, அவர்கள் நிறைவான சமாதானத்தையும், சத்தியத்தையும் அனுபவித்து மகிழும்படி செய்வேன்.
7
நான் யூதாவையும், இஸ்ரயேலையும் சிறையிருப்பில் இருந்து மீட்டு, அவர்கள் முன்பிருந்த நிலைக்கு அவர்களைத் திரும்பவும் கட்டி எழுப்புவேன்.
8
அவர்கள் எனக்கு விரோதமாக செய்த எல்லாப் பாவங்களிலிருந்தும் அவர்களைத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்த எல்லா அக்கிரமங்களையும் பாவங்களையும் அவர்களுக்கு மன்னிப்பேன்.
9
நான் இப்பட்டணத்திற்குச் செய்த எல்லா நற்செயல்களையும் பூமியின் எல்லா தேசத்தார்களும் கேட்கும்போது, இந்தப் பட்டணம் எனக்குப் புகழையும், மகிழ்ச்சியையும், துதியையும், மகிமையையும் கொண்டுவரும். நான் அந்தப் பட்டணத்திற்குக் கொடுக்கும் நிறைவான செல்வத்தையும், சமாதானத்தையும் கண்டு அவர்கள் பிரமித்து நடுங்குவார்கள்.
10
யெகோவா கூறுவது இதுவே: மக்கள் இந்த இடத்தைக் குறித்து, இது மனிதரோ, மிருகங்களோ குடியிராத பாழிடம் என்பார்கள். அப்படியிருந்தும் மனிதரோ மிருகங்களோ குடியிராமல் பாழாய் கிடக்கின்ற, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும்,
11
சந்தோஷத்தின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணமகளின் குரலும், மணமகனின் குரலும் கேட்கும். அத்துடன், யெகோவாவின் ஆலயத்திற்கு நன்றிக் காணிக்கைகளைக் கொண்டுவருபவர்களின் குரல்களும் கேட்கும்: “சேனைகளின் யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்; யெகோவா நல்லவர்; அவருடைய அன்பு என்றும் நிலைத்து நிற்கும்” என்று சொல்வார்கள். நான், அவர்களுடைய நாட்டிற்கு முன்பு இருந்ததுபோல் செல்வத்தையெல்லாம் திரும்பவும் கொடுப்பேன் என்று யெகோவா கூறுகிறார்.
12
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்த இடம் மனிதர்களோ, மிருகங்களோ இல்லாமல் பாழடைந்திருக்கும். ஆயினும் இதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களிலும் மீண்டும் தங்கள் மந்தையை மேய்ப்பதற்கான மேய்ச்சலிடங்கள் மேய்ப்பர்களுக்கு உண்டாயிருக்கும்.
13
மேற்கு மலைச்சரிவிலுள்ள பட்டணங்களிலும், நெகேவ் பிரதேசத்திலுள்ள பட்டணங்களிலும், பென்யமீன் பிரதேசத்திலும், எருசலேமைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் மீண்டும் தங்களைக் கணக்கெடுப்பவனின் கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று யெகோவா கூறுகிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options