எரேமியா 17:1-18
1
“யூதாவின் பாவம், இரும்பு எழுத்தாணியால் செதுக்கப்பட்டு, வைரத்தின் நுனியினால் பொறிக்கப்பட்டுள்ளது. அது அவர்களுடைய இருதயமாகிய கற்பலகையிலும், அவர்களின் பலிபீடத்தின் கொம்புகளிலும் செதுக்கப்பட்டும் பொறிக்கப்பட்டும் உள்ளது.
2
அவர்களுடைய பிள்ளைகளுங்கூட பச்சையான மரங்களுக்கருகிலும் உயர்ந்த குன்றுகளின்மேலுள்ள மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
3
நாட்டிலுள்ள என் மலையையும், உன் செல்வத்தையும், உன் பொக்கிஷங்கள் எல்லாவற்றையும், அதோடுகூட உயர்ந்த உன் மேடைகளையும் கொள்ளைப்பொருளாக நான் கொடுப்பேன். உன் நாடெங்குமுள்ள பாவத்தின் நிமித்தம் இப்படிச் செய்வேன்.
4
நான் உனக்குத் தந்த உரிமைச்சொத்தை உன் குற்றத்தினாலேயே நீ இழந்து விடுவாய். நீ அறியாத நாட்டில் நான் உன்னை உன் பகைவருக்கு அடிமையாக்குவேன். ஏனெனில் நீ என் கோபத்தை மூட்டியிருக்கிறாய். அது என்றைக்கும் எரிந்துகொண்டேயிருக்கும்.”
5
யெகோவா சொல்வது இதுவே: “மனிதரில் தன் நம்பிக்கையை வைத்து, தன் பெலனுக்காக மாம்சத்தைச் சார்ந்து, யெகோவாவைவிட்டு தனது இருதயத்தை விலக்கிக்கொள்கிறவன் சபிக்கப்பட்டவன்.
6
அவன் பாழ்நிலத்திலுள்ள புதரைப்போல இருப்பான். அவன் செழிப்பு வரும்போது, அதைக் காணமாட்டான். அவன் யாரும் வசிக்க முடியாத உவர் நிலத்திலும், பாலைவனத்திலுள்ள வறண்ட இடங்களிலும் தங்கியிருப்பான்.
7
“ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைத்து, அவரை உறுதியாய் நம்புகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
8
அவன் தண்ணீரின் ஓரத்தில் நடப்பட்டு நீரூற்றருகில் தனது வேர்களை விடும் மரத்தைப்போல இருப்பான். வெப்பம் வரும்போது அது பயப்படுவதில்லை. எப்போதும் அதன் இலைகள் பச்சையாயிருக்கும். வறட்சியான வருடத்தில் அதற்குக் கவலை இல்லை. அது பழங்கொடுக்கத் தவறுவதில்லை.”
9
எல்லாவற்றிலும் பார்க்க இருதயமே வஞ்சனையுள்ளது. அதைக் குணமாக்கவே முடியாது. அதை உணர்ந்து கொள்ளக்கூடியவன் யார்?
10
“யெகோவாவாகிய நானே இருதயத்தை ஆராய்ந்து, மனதைச் சோதித்துப் பார்க்கிறவர். மனிதனுக்கு அவனுடைய நடத்தைக்குத்தக்க வெகுமதி கொடுப்பதும், அவனுடைய செயல்களுக்குத்தக்க பலனளிப்பதும் நானே.”
11
அநீதியான முறைகளால் தன் செல்வத்தைச் சேர்க்கிறவன், தான் இடாத முட்டைகளை அடைகாக்கும் கவுதாரிக்கு ஒப்பாயிருக்கிறான்; அவனுடைய வாழ்வின் பாதி நாட்கள் போனபின், அவனுடைய செல்வங்கள் அவனைவிட்டு நீங்கிப்போய்விடும்; முடிவிலோ அவன் தன்னை மூடன் என நிரூபிப்பான்.
12
எங்களுடைய பரிசுத்த இடம் ஆதியிலிருந்தே உயர்த்தப்பட்ட மகிமையுள்ள அரியணையாயிருக்கிறது.
13
யெகோவாவே, இஸ்ரயேலின் எதிர்ப்பார்ப்பே, உம்மைக் கைவிடும் யாவரும் வெட்கத்திற்குள்ளாவார்கள். உம்மைவிட்டு விலகுகிற அவர்கள் யாவரும் வாழும் நீரூற்றாகிய யெகோவாவைக் கைவிட்டபடியால், புழுதியில் அழிவார்கள்.
14
யெகோவாவே, என்னைக் குணமாக்கும், நான் குணமாவேன். என்னைக் காப்பாற்றும், நான் காப்பாற்றப்படுவேன். ஏனெனில் நான் துதிக்கிறவர் நீரே.
15
இந்த மக்களோ என்னிடம், “யெகோவாவின் வார்த்தை எங்கே? இப்போது அது நிறைவேறட்டும்” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
16
நானோ உம்மைப் பின்பற்றும் மேய்ப்பனாயிருப்பதை விட்டு ஓடிவிடவில்லை. ஏமாற்றத்தின் நாளை நான் விரும்பவில்லை என்பதை நீர் அறிவீர். என் வாயின் வார்த்தைகள் உமக்குமுன் இருக்கின்றன.
17
நீர் எனக்கு ஒரு பயங்கரமாக இராதேயும். பேராபத்து வரும்நாளில் நீரே என் அடைக்கலம்.
18
என்னைத் துன்புறுத்துகிறவர்கள் வெட்கத்துக்கு உள்ளாகட்டும், என்னையோ வெட்கப்பட விடாதிரும். அவர்கள் பயப்படட்டும், என்னையோ பயமின்றிக் காத்துக்கொள்ளும். பேராபத்தின் நாளை அவர்கள்மேல் வரப்பண்ணும். இரு மடங்கான அழிவினால் அவர்களை அழித்துவிடும்.
Settings