எபிரெயர் 13:1-17
1
ஒருவரிலொருவர், சகோதர அன்பில் தொடர்ந்து நிலைத்திருங்கள்.
2
அந்நியரை உபசரிக்க மறந்துவிடாதீர்கள். ஏனெனில் அவ்விதம் செய்ததினால், சிலர் அறியாமல் இறைத்தூதர்களையும் உபசரித்திருக்கிறார்கள்.
3
சிறையில் இருப்பவர்களை, நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோலவும், துன்பப்படுகிறவர்களை, நீங்களும் அவர்களோடு துன்பப்படுவதைப்போலவும் எண்ணிக்கொண்டு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
4
திருமணம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். திருமணப்படுக்கை தூய்மையாக காக்கப்படவேண்டும். விபசாரத்திலும், முறைகேடான பாலுறவிலும் ஈடுபடுகிறவர்களை இறைவன் நியாயந்தீர்ப்பார்.
5
பண ஆசையிலிருந்து விலகி, உங்களிடம் இருப்பதைக்கொண்டு மனத்திருப்தியுடன் வாழுங்கள். ஏனெனில் இறைவன், “நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலகமாட்டேன்; நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்” என்று சொல்லியிருக்கிறாரே.
6
எனவே நாமும் மனத்தைரியத்துடன், “கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன். மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?” என்று சொல்வோம்.
7
உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொடுத்த தலைவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையின் பிரதிபலனை யோசித்துப் பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தையே நீங்களும் பின்பற்றுங்கள்.
8
இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார்.
9
பல்வேறுபட்ட விசித்திரமான போதனைகளினால், வழிவிலகிப் போகாதிருங்கள். எந்த பயனும் இல்லாத சடங்குமுறை உணவு வகைகளினால் அல்ல கிருபையினால் நம்முடைய இருதயம் பெலப்படுவதே நல்லது.
10
இறைசமுகக் கூடாரத்தில் பணிபுரிகிறவர்கள் அதிலிருந்து சாப்பிட அதிகாரமில்லாத ஒரு பலிபீடம் நமக்கு உண்டு.
11
பிரதான ஆசாரியன் மிருகங்களின் இரத்தத்தை, மகா பரிசுத்த இடத்திற்கு பாவநிவாரண காணிக்கையாகக் கொண்டுபோகிறான். ஆனால் மிருகங்களின் உடல்களோ முகாமுக்கு வெளியே எரிக்கப்படுகின்றன.
12
இவ்விதமே இயேசுவும்கூட, நகர வாசலுக்கு வெளியே வேதனைகளை அனுபவித்து, தமது சொந்த இரத்தத்தின் மூலமாக மக்களைப் பரிசுத்தமாக்கினார்.
13
ஆகையால், அவர் சுமந்த அவமானத்தை நாமும் சுமந்து, முகாமுக்கு வெளியே அவரிடம் போவோம்.
14
ஏனெனில், நித்தியமான நகரம் நமக்கு இங்கு இல்லை. வரப்போகின்ற ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
15
ஆகவே இயேசுவின் மூலமாய் இறைவனுடைய பெயரை அறிக்கையிடுகிற உதடுகளின் கனியை, துதியின் காணிக்கையாக இறைவனுக்கு இடைவிடாது செலுத்துவோமாக.
16
நன்மைசெய்ய மறக்கவேண்டாம், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிடவேண்டாம். இப்படியான பலிகளிலேயே இறைவன் பிரியப்படுகிறார்.
17
உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுடைய அதிகாரத்திற்கு பணிந்து நடவுங்கள். ஏனெனில், அவர்கள் கணக்குக் கொடுக்கவேண்டியவர்களாக, உங்கள்மேல் கண்காணிப்பு செய்கிறார்கள். நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களது பொறுப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது ஒரு துயரமாய் இருக்காது. அவர்கள் துயரத்தோடு பொறுப்பெடுத்தால், உங்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது.
Settings