ஆதியாகமம் 24:46-61
46
“அவள் விரைவாக தன் தோளிலிருந்த குடத்தை இறக்கி, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்’ என்று சொன்னாள். அப்படியே நான் குடித்தேன், என் ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் கொடுத்தாள்.
47
“அப்பொழுது நான் அவளிடம், ‘நீ யாருடைய மகள்?’ என்று கேட்டேன். “அதற்கு அவள், ‘நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான, பெத்துயேலின் மகள்’ என்றாள். “அப்பொழுது நான் அவளுக்கு மூக்குத்தியையும் வளையல்களையும் கொடுத்தேன்.
48
பின்பு நான் தலைகுனிந்து, யெகோவாவை வழிபட்டேன். என் எஜமான் ஆபிரகாமின் இறைவனைத் துதித்தேன்; என் எஜமானின் சகோதரனுடைய பேத்தியை அவருடைய மகனுக்கு மனைவியாக எடுக்க, சரியான வழியில் என்னை நடத்திய யெகோவாவைத் துதித்தேன்.
49
ஆகவே, நீங்கள் என் எஜமானுக்குத் தயவாகவும், உண்மையாகவும் நடக்க விரும்பினால் எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது எப்பக்கம் திரும்பவேண்டும் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்றான்.
50
அதற்கு லாபானும் பெத்துயேலும், “இது யெகோவாவினால் வந்திருக்கிறது; இதில் நாங்கள் குறுக்கிட்டு ஒன்றுமே சொல்லமுடியாது.
51
ரெபெக்காள் இதோ இருக்கிறாள்; அவளை நீ கூட்டிக்கொண்டுபோ, யெகோவா நடத்தியபடியே இவள் உனது எஜமானின் மகனுக்கு மனைவியாகட்டும்” என்றார்கள்.
52
ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் சொன்னதைக் கேட்டதும், யெகோவாவுக்கு முன்பாக தரைமட்டும் குனிந்து வழிபட்டான்.
53
அதன்பின் அந்த வேலைக்காரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், உடை வகைகளையும் கொண்டுவந்து ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவளது சகோதரனுக்கும், தாய்க்கும் பெரும் மதிப்புமிக்க அன்பளிப்புகளைக் கொடுத்தான்.
54
பின்பு அவனும் அவனோடு வந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, அன்றிரவு அங்கே தங்கினார்கள். மறுநாள் காலையில் அவன் எழுந்ததும், “என் எஜமானிடத்திற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான்.
55
ஆனால் ரெபெக்காளின் சகோதரனும், தாயும், “பத்து நாட்களுக்காவது பெண் எங்களுடன் தங்கியிருக்கட்டும்; அதன்பின் போகலாம்” என்றார்கள்.
56
அதற்கு அவன், “யெகோவா என் பயணத்தின் நோக்கத்தை நிறைவேறச் செய்தபடியால், என்னைத் தடைசெய்ய வேண்டாம். என் எஜமானிடம் நான் போவதற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான்.
57
அப்பொழுது அவர்கள், “நாம் பெண்ணைக் கூப்பிட்டு இதைப்பற்றி அவளிடம் கேட்போம்” என்றார்கள்.
58
பின் ரெபெக்காளைக் கூப்பிட்டு, “நீ இந்த மனிதனுடன் போகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “ஆம் போகிறேன்” என்றாள்.
59
எனவே அவர்கள், தமது சகோதரி ரெபெக்காளை, அவளது தாதியோடும், ஆபிரகாமின் வேலைக்காரனோடும், அவனுடன் வந்த மனிதரோடும் வழியனுப்பி வைத்தார்கள்.
60
அவர்கள் ரெபெக்காளை ஆசீர்வதித்து சொன்னது: “எங்கள் சகோதரியே, நீ ஆயிரம் பதினாயிரமாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியினர் தங்கள் பகைவரின் பட்டண வாசல்களைத் தங்கள் உரிமையாக்கிக் கொள்வார்களாக.”
61
பின்பு ரெபெக்காளும் அவள் தோழியரும் ஆயத்தமாகி, தங்கள் ஒட்டகங்களில் ஏறி, அந்த மனிதருடன் போனார்கள். இவ்விதம் அந்த வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
Settings