Skip to content
எசேக்கியேல் 46:1-18

எசேக்கியேல் 46:1-18

1
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. கிழக்கு நோக்கியிருக்கும் உள்முற்றத்து வாசல், ஆறு வேலை நாட்களும் மூடப்பட்டிருக்கவேண்டும். ஆனால், ஓய்வுநாட்களிலும், அமாவாசை தினங்களிலும் அது திறக்கப்பட்டிருக்க வேண்டும்.
2
அரசன் வெளியிலிருந்து இந்த நுழைவு வாசலின் மண்டபத்தின் வழியாக உள்ளே வந்து, வாசல் நிலையருகில் நிற்கவேண்டும். ஆசாரியர்கள் அவனுடைய தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளையும் செலுத்தவேண்டும். அவன் நுழைவு வாசலின் முகப்பில் நின்று வழிபாடு செய்தபின், வெளியே போகவேண்டும். ஆனால் சாயங்காலம்வரை வாசல் மூடப்படக்கூடாது.
3
ஓய்வுநாட்களிலும், அமாவாசை தினங்களிலும் நாட்டு மக்கள் யெகோவாவின் முன்னிலையில் புகுமுக நுழைவாசலில் வழிபாடு செய்யவேண்டும்.
4
ஓய்வுநாளில் அரசனால் யெகோவாவுக்கென்று கொண்டுவரப்படும் தகன காணிக்கையானது, பழுதற்ற ஆறு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளும் ஒரு செம்மறியாட்டுக் கடாவுமாக இருக்கவேண்டும்.
5
செம்மறியாட்டுக் கடாவுடன் செலுத்தப்படும் தானிய காணிக்கையானது ஒரு எப்பா அளவுடையதாக இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் குட்டிகளுடன் செலுத்தப்படும் தானிய காணிக்கை அரசன் விரும்பிய அளவினைக் கொண்டதாயிருக்க வேண்டும். அதோடு ஒவ்வொரு எப்பா அளவு தானியத்துடனும் ஒரு ஹின் அளவு எண்ணெயும் செலுத்தப்படுதல் வேண்டும்.
6
அவன் அமாவாசைத் தினத்திலே பழுதற்ற இளங்காளையொன்றையும், ஆறு செம்மறியாட்டுக் குட்டிகளையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் செலுத்தவேண்டும்.
7
அவன் ஒரு காளையுடன் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவுடன் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும், செம்மறியாட்டுக் குட்டிகளுடன் அவன் விரும்பிய அளவு தானிய காணிக்கைகளையும் செலுத்தவேண்டும். ஒவ்வொரு எப்பா தானிய காணிக்கைளுடனும் ஒரு ஹின் அளவு எண்ணெயையும் செலுத்தவேண்டும்.
8
அரசன் உட்செல்லும்போது அவன் புகுமுக மண்டபத்தின் நுழைவு வாசலின் வழியாகப்போய் அதே வழியாகவே திரும்பி வரவேண்டும்.
9
“ ‘நாட்டு மக்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களில் வழிபாட்டுக்காக யெகோவாவுக்கு முன்வரும்போது வடக்கு வாசல் வழியாக உட்செல்வோர் தெற்கு வாசல்வழியாகவும், தெற்கு வாசல் வழியாக உட்செல்வோர் வடக்கு வாசல்வழியாகவும் வெளியேறவேண்டும். ஒருவரும் தான் உட்சென்ற வாசல் வழியாகத் திரும்பி வெளியேறக்கூடாது. ஒவ்வொருவரும் தாம் உட்சென்ற வாசலுக்கு எதிரே இருக்கும் வாசல்வழியாகவே வெளியேறவேண்டும்.
10
அரசனும் அவர்கள் மத்தியிலேயே இருந்து அவர்கள் உட்செல்லும்போது உட்சென்று அவர்கள் வெளியேறும்போது வெளியேறவேண்டும்.
11
பண்டிகைகளிலும், நியமிக்கப்பட்ட விசேஷ தினங்களிலும் செலுத்தப்படும் தானிய காணிக்கை, ஒரு காளையோடே ஒரு எப்பா அளவுடையதாகவும், ஒரு செம்மறியாட்டுக் கடாவோடே ஒரு எப்பா அளவுடையதாகவும் இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் குட்டிகளோடு, அவரவர் விரும்பிய அளவு தானியமும் இருக்கவேண்டும். அத்துடன் ஒவ்வொரு எப்பா அளவு தானியத்திற்கு ஒரு ஹின் அளவு எண்ணெயும் கொண்டதாயிருக்க வேண்டும்.
12
“ ‘அரசன் தகன காணிக்கையையோ, சமாதான காணிக்கையையோ யெகோவாவுக்கு மனப்பூர்வமான காணிக்கையாகச் செலுத்த வரும்போது, கிழக்கு நோக்கியிருக்கும் வாசல் அவனுக்காகத் திறக்கப்படவேண்டும். ஓய்வுநாளில் செய்வதுபோலவே, தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளையும் அவன் செலுத்தவேண்டும். பின்பு அவன் வெளியே போகவேண்டும். அவன் வெளியே போனபின் வாசல் மூடப்படவேண்டும்.
13
“ ‘நீங்கள் ஒவ்வொரு நாளும் பழுதற்ற ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டி ஒன்றை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். காலைதோறும் அதைக் கொடுக்கவேண்டும்.
14
அதனோடு தானிய காணிக்கையாக ஆறில் ஒரு எப்பா அளவு தானிய மாவையும் அதில் தெளிப்பதற்காக மூன்றில் ஒரு ஹின் எண்ணெயையும் காலைதோறும் கொடுக்கவேண்டும். யெகோவாவுக்குக் கொடுக்கப்படவேண்டிய இத்தானிய காணிக்கைகள் ஒரு நித்திய கட்டளையாயிருக்கும்.
15
எனவே, செம்மறியாட்டுக் குட்டியும், தானிய காணிக்கையும், எண்ணெயும் தகன காணிக்கையாக காலைதோறும் ஒழுங்காகச் செலுத்தப்படுவதற்காகக் கொடுக்கப்படுதல் வேண்டும்.
16
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. அரசன் தன் உரிமைச்சொத்திலிருந்து தன் மகன்களில் ஒருவனுக்கு அன்பளிப்பொன்றைக் கொடுப்பானாயின், அது அவனுடைய சந்ததிகளுக்கும் சொந்தமாகும். அது அவர்களின் உரிமைச் சொத்தாகவேண்டும்.
17
ஆயினும், அவன் தன் உரிமைச்சொத்திலிருந்து தனது வேலைக்காரரில் ஒருவனுக்கு ஒரு அன்பளிப்பைச் செய்திருப்பின் அவ்வேலைக்காரன் விடுதலை வருடம்வரை அதை அனுபவிக்கலாம். பின்பு அது அரசனையே சாரும். அவனுடைய உரிமைச்சொத்தோ அவனுடைய மகன்களுக்கு மட்டுமே சொந்தமாயிருக்கும். அது அவர்களுடையதே.
18
அரசன் மக்களுடைய உரிமைச்சொத்துக்களில் எதையேனும் எடுத்துக்கொண்டு அவர்களை அவர்களுடைய இருப்பிடத்திலிருந்து துரத்திவிடக்கூடாது. அவன் தன் சொந்த நில உரிமைகளிலிருந்தே தன் மகன்களுக்கான உரிமைச்சொத்துக்களைக் கொடுக்கவேண்டும். அப்பொழுது என் மக்கள் எவருமே தங்கள் நில உரிமைகளிலிருந்து வேறுபிரிக்கப்பட மாட்டார்கள்.’ ”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options