எசேக்கியேல் 16:44-52
44
“ ‘பழமொழி சொல்லும் ஒவ்வொருவனும்: “தாயைப்போலவே மகளும் இருப்பாள், என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்வான்.”
45
நீயோ, தன் கணவனையும், தன் பிள்ளைகளையும் வெறுத்த உன் தாய்க்கு உண்மையான மகள். நீ தங்கள் கணவர்களையும் தங்கள் பிள்ளைகளையும் வெறுத்த உன் சகோதரிகளுக்கு உண்மைச் சகோதரியுமாய் இருக்கிறாய். உன் தாயோ ஏத்திய பெண். உன் தந்தையோ எமோரியன்.
46
உன் வடபுறத்தில் தன் மகள்களுடன் குடியிருந்த சமாரியா உன் அக்காள். உன் தென்புறத்தில் தன் மகள்களுடன் குடியிருந்த சோதோம் உன் தங்கை.
47
நீ அவர்களுடைய இழிவான செயல்களைப் பின்பற்றி, அவர்களுடைய வழியில் நடந்ததுமன்றி, உன் எல்லா வழிகளிலும் அவர்களைவிடவும் மோசமாக நீ நடந்தாய்.
48
யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீயும் உன் மகள்களும் செய்ததை, உனது சகோதரியாகிய சோதோமும், அவள் மகள்களுங்கூட செய்யவில்லை என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
49
“ ‘உன் சகோதரியாகிய சோதோமின் பாவம் இதுவே: அவளும் அவள் மகள்களும் அகந்தையுள்ளவர்களும் மிதமிஞ்சி சாப்பிட்டு, இரக்கம் இல்லாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள் ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் உதவிசெய்யவில்லை.
50
அவர்கள் அகந்தைகொண்டு எனக்கு முன்பாக அருவருப்பான செயல்களைச் செய்தார்கள். ஆகையால் நான் அவர்களை அழித்தேன். நீ அதைக் கண்டாய்.
51
நீ செய்த பாவங்களில் பாதியையேனும் சமாரியா செய்யவில்லை. அவர்கள் அருவருப்பான செயல்களை நீ செய்தாய். நீ செய்த இவை எல்லாவற்றினாலும் உன் சகோதரிகளை நீதியுள்ளவர்கள்போல் காணும்படி செய்தாய்.
52
உன் சகோதரிகளை நீதியுள்ளவர்கள்போல் காண்பிப்பதற்கு உன் செயல்கள் இடமளித்துள்ளதால், உன் அவமானத்தை நீயே சுமந்துகொள். ஏனெனில், உனது பாவங்கள் அவர்களின் பாவங்களைவிட மிகவும் கேவலமானவை. அவர்களோ உன்னைப் பார்க்கிலும் நீதியுள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள். ஆகவே நீ உன் சகோதரிகளை நீதியுள்ளவர்கள்போல் காணும்படி செய்தபடியால், நீ வெட்கப்பட்டு உன் அவமானத்தை சுமந்துகொள்.
Settings