யாத்திராகமம் 33:1-6
1
பின்பு யெகோவா மோசேயிடம், “நீயும், எகிப்திலிருந்து நீ அழைத்துவந்த மக்களும் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, ‘உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன்’ என்று நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டு வாக்குப்பண்ணிய நாட்டிற்குப் போங்கள்.
2
நான் உங்களுக்கு முன்னே ஒரு இறைத்தூதனை அனுப்பி கானானியர், எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரை வெளியே துரத்திவிடுவேன்.
3
பாலும் தேனும் ஓடும் நாட்டிற்குப் போங்கள். ஆனால் நானோ உங்களோடு வரமாட்டேன். ஏனெனில், நீங்கள் பிடிவாத குணமுள்ளவர்கள். அதனால் நான் உங்களை வழியிலேயே அழித்துவிட நேரிடலாம்” என்றார்.
4
மிகவும் துயரமான இவ்வார்த்தைகளை மக்கள் கேட்டவுடன் அவர்கள் துக்கமடைய தொடங்கினார்கள். அவர்கள் ஒருவரும் தங்கள் நகைகளை அணிந்து கொள்ளவில்லை.
5
ஏனெனில் யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘நீங்கள் பிடிவாத குணமுள்ள மக்கள். ஆகையால், உங்களுடன் ஒரு நொடிப்பொழுது நான் வந்தாலும் உங்களை அழித்துவிட நேரிடும். இப்பொழுது நீங்கள் நகைகளைக் கழற்றுங்கள். நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிப்பேன்’ எனச் சொல்” என்று சொல்லியிருந்தார்.
6
ஆகவே இஸ்ரயேலர் ஓரேப் மலையில் தங்கள் நகைகளைக் கழற்றிப் போட்டார்கள்.
Settings