2 சாமுயேல் 19:24-30
24
சவுலின் பேரன் மேவிபோசேத்தும் அரசனைச் சந்திக்கும்படி வந்தான். அரசன் வெளியேறிய நாள் முதல், அவர் பாதுகாப்பாகத் திரும்பி வரும்வரை அவன் தன் கால்களைக் கவனிக்காமலும், மீசையை வெட்டாமலும், உடைகளைக் கழுவிக் கொள்ளாமலும் இருந்தான்.
25
அவன் எருசலேமிலிருந்து அரசனைச் சந்திக்க வந்தபோது அரசன் அவனிடம், “மேவிபோசேத்தே! நான் போகும்போது நீ ஏன் என்னுடன் வரவில்லை” என்று கேட்டான்.
26
அதற்கு அவன், “என் தலைவனாகிய அரசே! உம்முடைய அடியவன் முடவனாகையால் நான் என் பணியாளன் சீபாவிடம், ‘என் கழுதைமேல் சேணம் வைத்து அதில் ஏற்றி அரசனுடன் போகும்படி உதவிசெய் எனக் கேட்டேன்.’ ஆனால் என் பணியாளன் சீபா எனக்குத் துரோகம் செய்தான். உதவிசெய்யாமல் ஏமாற்றினான்.
27
அதுவுமன்றி என் தலைவனாகிய அரசனுக்கு என்னைப்பற்றி வீண் அவதூறு சொன்னான். என் தலைவனாகிய அரசன் எனக்கு இறைவனின் தூதனைப்போல் இருக்கிறீர். எனவே உமக்கு விருப்பமானதைச் செய்யும்.
28
நானும் என் பாட்டனாரின் சந்ததியினரும் என் தலைவனாகிய அரசனிடம் மரணத்தைத் தவிர வேறு எதையும் பெற தகுதியற்றவர்களாய் இருந்தோம். ஆனாலும் உமது அடியவனுக்கு உம்முடைய பந்தியில் அமர்ந்திருப்பவர்களுடன் ஒரு இடத்தைக் கொடுத்தீர்; ஆதலால் இப்பொழுதும் உம்மிடம் வேண்டுகோள் விடுப்பதற்கு எனக்கு என்ன தகுதியிருக்கிறது?” எனப் பதிலளித்தான்.
29
அப்பொழுது அரசன் அவனிடம், “இதைப்பற்றி நீ இன்னும் அதிகமாய் பேசுவானேன்; உங்கள் உரிமை நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளும்படி சீபாவுக்கும், உனக்கும் கட்டளையிடுகிறேன்” என்றான்.
30
அதற்கு மேவிபோசேத் அரசனிடம், “இப்பொழுது என் தலைவனான அரசன் பாதுகாப்பாகத் திரும்பி வந்திருக்கும்போது எனக்கு வேறொன்றும் தேவையில்லை. அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும்” என்றான்.
Settings