2 இராஜாக்கள் 17:7-23
7
இஸ்ரயேலர் எகிப்திய அரசனான பார்வோனின் அதிகாரத்திலிருந்து தங்களை விடுதலையாக்கிக் கொண்டுவந்த தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியாலேயே, அவர்களுக்கு இவையெல்லாம் ஏற்பட்டது. அவர்கள் வேறு தெய்வங்களையும் வணங்கி,
8
யெகோவா தங்களுக்கு முன்னால் துரத்திவிட்ட நாட்டினரின் நடைமுறைகளையும் பின்பற்றினார்கள். அத்துடன் இஸ்ரயேல் அரசர்கள் உட்புகுத்திய பாரம்பரிய வழக்கங்களையும் பின்பற்றினர்.
9
மேலும் இஸ்ரயேல் மக்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராக பிழையான செயல்களை இரகசியமாகவும் செய்தனர். அத்துடன் காவற் கோபுரத்திலிருந்து, அரணாக்கப்பட்ட பட்டணம் வரையும் தங்களுடைய எல்லாப் பட்டணங்களிலும் வழிபாட்டு மேடைகளைக் கட்டினார்கள்.
10
ஒவ்வொரு உயர்ந்த குன்றுகளிலும், விசாலமான ஒவ்வொரு மரத்தின் கீழும் புனித கற்களையும், அசேரா விக்கிரக தூண்களையும் நாட்டினார்கள்.
11
யெகோவா தங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட நாட்டினர் செய்ததுபோல் ஒவ்வொரு வழிபாட்டு மேடைகளிலும் தூபங்காட்டினார்கள். கொடிய காரியங்களையும் செய்து யெகோவாவைக் கோபப்படுத்தினார்கள்.
12
“இவற்றைச் செய்யவேண்டாம்” என்று யெகோவா குறிப்பாகத் திரும்பத்திரும்ப எச்சரித்த விக்கிரக வழிபாட்டையே அவர்கள் செய்துவந்தார்கள்.
13
யெகோவா தமது இறைவாக்கினர் மூலமும், தரிசனம் காண்பவர்கள் மூலமும், “உங்கள் பொல்லாத வழிகளைவிட்டு விலகுங்கள். நான் எனது பணியாட்களான இறைவாக்கினர்மூலம் கொடுத்து, உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்ட முழு சட்டத்தின்படி எனது கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளுங்கள்” என்று இஸ்ரயேலையும், யூதாவையும் எச்சரித்தார்.
14
ஆனால் அவர்கள் அதைக் கேட்க மறுத்து, தங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வைக்காத தங்கள் முற்பிதாக்களைப்போல பிடிவாதமுள்ளோராக இருந்தார்கள்.
15
யெகோவா அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கைக்கொள்ளும்படி எச்சரித்துக் கொடுத்த விதிமுறைகளையும், நியமங்களையும், அவர்களுடன் செய்த உடன்படிக்கையையும் அவர்கள் வெறுத்துத் தள்ளிவிட்டார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைப் பின்பற்றி, தாங்களும் பயனற்றவர்களானார்கள். யெகோவா அவர்களுக்குக் கட்டளையிட்டு, “நீங்கள் உங்களைச்சுற்றி வாழும் நாட்டினர் செய்வதுபோல் செய்யவேண்டாம்” என்று சொல்லியுங்கூட, அவர்கள் அதையே பின்பற்றினார்கள். யெகோவா செய்யவேண்டாமென்று விலக்கியவற்றையே அவர்கள் செய்தார்கள்.
16
தங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகள் யாவையும்விட்டு, தங்களுக்கு வார்க்கப்பட்ட உலோகத்தால் இரண்டு கன்றுக்குட்டிகளின் உருவத்தில் விக்கிரகங்களையும், அசேரா விக்கிரக தூணையும் செய்தார்கள். எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் வணங்கி, பாகாலையும் வழிபட்டார்கள்.
17
தங்கள் மகன்களையும், மகள்களையும் நெருப்பில் பலியிட்டார்கள். குறிகேட்டு சகுனம் பார்த்தல், மாயவித்தை முதலிய வழக்கங்களில் ஈடுபட்டு, யெகோவாவின் பார்வையில் தீய செயல்களைச் செய்வதற்குத் தங்களை விற்று யெகோவாவைக் கோபமூட்டினார்கள்.
18
இதனால் யெகோவா இஸ்ரயேலரில் அதிக கோபங்கொண்டு தமது சமுகத்திலிருந்து அவர்களை அகற்றிவிட்டார். யூதா கோத்திரம் மட்டுமே மீதியாயிருந்தது.
19
யூதாவுங்கூட தங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. அவர்கள் இஸ்ரயேலர் அறிமுகப்படுத்திய நடைமுறைகளைப் பின்பற்றினர்.
20
இதனால் யெகோவா இஸ்ரயேலர் அனைவரையும் வெறுத்துத் தள்ளினார். அவர்களை அவர் துன்பத்துக்குள்ளாக்கி, தமது சமுகத்திலிருந்து முழுவதுமாகத் துரத்துண்டு போகும்வரையும் கொள்ளையிடுபவர்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தார்.
21
தாவீதின் வம்சத்திலிருந்து யெகோவா இஸ்ரயேலரை அகற்றியதும், அவர்கள் நேபாத்தின் மகன் யெரொபெயாமை தங்களுக்கு அரசனாக்கினார்கள். யெரொபெயாமோ இஸ்ரயேலை யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து வழிவிலகச் செய்து அவர்களைப் பெரும்பாவமொன்றைச் செய்யவும் தூண்டினான்.
22
இஸ்ரயேலர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களையும் தொடர்ந்து செய்தார்கள். அவற்றைவிட்டு விலகவில்லை.
23
யெகோவா தமது பணியாளர்களான இறைவாக்கினர்மூலம் எச்சரித்திருந்தபடியே, அவர்களைத் தமது முன்னிருந்து நீக்கிப்போடும்வரை அவர்கள் இவற்றைவிட்டு விலகவில்லை. எனவே இஸ்ரயேலர் தங்கள் சொந்த நாட்டிலிருந்து அசீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் இன்றும் அங்கேயே இருக்கிறார்கள்.
Settings