2 இராஜாக்கள் 16:3-9
3
அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழிகளில் நடந்தான். இவன் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்திவிட்ட நாடுகளின் அருவருப்பான வழிகளைப் பின்பற்றி, தனது மகனையும் நெருப்பிலே பலியிட்டான்.
4
அவன் மலை உச்சியிலுள்ள மேடைகளிலும், அடர்ந்த மரங்களின் கீழும் பலிசெலுத்தி, தூபங்காட்டினான்.
5
அப்பொழுது சீரிய அரசன் ரேத்சீனும் ரெமலியாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் பெக்காவும் எருசலேமுக்கு எதிராக அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஆகாசை சூழ்ந்துகொண்டபோதும், அவனை மேற்கொள்ள முடியவில்லை.
6
அந்த நேரத்தில் சீரிய அரசன் ரேத்சீன் யூதாவின் மனிதரைத் துரத்திவிட்டு, ஏலாத்தை சீரியாவுக்குத் திரும்பப் பெற்றுக்கொண்டான். அப்பொழுது ஏதோமியர் ஏலாத்துக்குக் குடியிருக்கப் போனார்கள். அவர்கள் இன்றுவரையும் அங்கேயே வாழ்கிறார்கள்.
7
அரசன் ஆகாஸ், அசீரியாவின் அரசன் திக்லாத்பிலேசருக்குத் தூதுவரை அனுப்பி, “நான் உமது பணியாளனும், உமக்கு வரி செலுத்துகிறவனுமாய் இருக்கிறேன். இப்போது என்னை எதிர்த்துத் தாக்குகின்ற சீரிய அரசனிடமிருந்தும், இஸ்ரயேல் அரசனிடமிருந்தும் என்னைக் காப்பாற்றும்” என்று கேட்டான்.
8
அத்துடன் ஆகாஸ் யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனைத் திரவிய அறையிலும் இருந்த வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து அவற்றை அசீரிய அரசனுக்கு ஒரு அன்பளிப்பாக அனுப்பினான்.
9
அசீரிய அரசன் இவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கி தமஸ்குவை தாக்கி அதைக் கைப்பற்றினான். அங்கிருந்த குடிமக்களை கீருக்கு நாடுகடத்தி ரேத்சீனையும் கொலைசெய்தான்.
Settings