Skip to content
2 நாளாகமம் 36:11-21

2 நாளாகமம் 36:11-21

11
சிதேக்கியா அரசனானபோது அவன் இருபத்தொரு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமை பதினோருவருடம் அரசாண்டான்.
12
அவன் தன் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். அவன் யெகோவாவினுடைய வார்த்தையை பேசிய இறைவாக்கினன் எரேமியாவுக்கு முன் தன்னைத் தாழ்த்தவில்லை.
13
அத்துடன் இறைவனின் பெயரில் தன்னை ஆணையிடும்படி செய்த அரசன் நேபுகாத்நேச்சாருக்கு விரோதமாக அவன் கலகம் செய்தான். அவன் அடங்காதவனாய் தன் இருதயத்தையும் கடினப்படுத்தி, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவினிடத்திற்குத் திரும்பாமல் இருந்தான்.
14
மேலும் ஆசாரியர்களின் எல்லாத் தலைவர்களும், மக்களும் அதிகமதிகமாக உண்மையற்றவர்களானார்கள். அவர்கள் பிறநாடுகளின் அருவருப்பான செயல்களைப் பின்பற்றி, யெகோவா எருசலேமில் பரிசுத்தம் பண்ணிய அவருடைய ஆலயத்தை அசுத்தப்படுத்தினார்கள்.
15
அவர்களுடைய முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா தனது தூதுவர்களின் மூலம் திரும்பத்திரும்ப அவர்களை எச்சரித்தார். ஏனெனில் அவர் தனது மக்கள்மேலும் தனது இருப்பிடத்தின்மேலும் அனுதாபம் கொண்டிருந்தார்.
16
ஆனால் அவர்களோ இறைவனின் தூதுவர்களை ஏளனம் செய்து, அவரது வார்த்தைகளை உதாசீனம் செய்து, அவரது இறைவாக்கினர்களை கேலி செய்தார்கள். அதனால் யெகோவாவின் கோபம் அவரது மக்களுக்கு எதிராக எழும்பியது. அதற்கு பரிகாரம் ஒன்றுமில்லாதிருந்தது.
17
எனவே அவர் அவர்களுக்கு எதிராக பாபிலோனியர்களின் அரசனைக் கொண்டுவந்தார். அவன் பரிசுத்த இடத்தில் அவர்களின் வாலிபரை வாளினால் கொன்றான். வாலிபர்களையோ, இளம்பெண்களையோ, வயதானவர்களையோ, முதியவர்களையோ ஒருவனையும் விட்டுவைக்கவில்லை. இறைவன் அவர்கள் எல்லோரையும் நேபுகாத்நேச்சாரிடம் கையளித்தார்.
18
அவன் பெரியதும் சிறியதுமான இறைவனுடைய ஆலயத்தின் எல்லாப் பொருட்களையும், யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்த திரவியங்களையும், அரசனுடைய திரவியங்களையும், அவனுடைய அதிகாரிகளுடைய திரவியங்களையும் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனான்.
19
அவர்கள் இறைவனுடைய ஆலயத்திற்கு நெருப்பு வைத்து, எருசலேமின் மதிலை உடைத்துப் போட்டார்கள். அவர்கள் எல்லா அரண்மனைகளையும் எரித்து, அங்குள்ள விலையுயர்ந்த எல்லாவற்றையும் அழித்துப்போட்டார்கள்.
20
வாளுக்குத் தப்பி மீதியாயிருந்தவர்களை அவன் பாபிலோனுக்கு நாடுகடத்திச் சென்றான். அவர்கள் பெர்சிய அரசு ஆட்சிக்கு வரும்வரை அவனுக்கும், அவன் மகன்களுக்கும் வேலையாட்களாய் இருந்தார்கள்.
21
நாடு தனது ஓய்வை அனுபவித்தது. எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தை நிறைவேறும்படியாக எழுபது வருடங்கள் பூர்த்தியாகும்வரை, நாடு பாழாய்க் கிடந்த காலமெல்லாம் அது இளைப்பாறியது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options