1 கொரிந்தியர் 1:10-17
10
பிரியமானவர்களே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துப்போகிறவர்களாய் இருந்தால், உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்காது. அத்துடன் நீங்களும், உங்கள் மனதிலும் சிந்தனையிலும் முழுமையாக ஒருமைப்பட்டும் இருப்பீர்கள்.
11
பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள்.
12
உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். இவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன்.
13
கிறிஸ்து பிளவுப்பட்டுள்ளாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா திருமுழுக்கைப் பெற்றீர்கள்?
14
கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் யாருக்காகிலும் நான் திருமுழுக்கு கொடுக்கவில்லையே. அதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
15
ஆகவே, என் பெயரால் திருமுழுக்கு பெற்றதாக உங்களில் ஒருவனாகிலும் சொல்லமுடியாது.
16
ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் திருமுழுக்கு கொடுத்தேன். அதற்கு மேலாக, வேறுயாருக்கும் நான் திருமுழுக்கு கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.
17
கிறிஸ்து என்னைத் திருமுழுக்கு கொடுக்க அனுப்பவில்லை, நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். கிறிஸ்துவின் சிலுவை அதன் வல்லமையை இழந்து போகாதிருக்கும்படி, மனித ஞானத்தின் அடிப்படையிலான வார்த்தைகளை உபயோகிக்காமல் பிரசங்கிக்கவே அவர் என்னை அனுப்பினார்.
Settings