1 நாளாகமம் 21:1-8
1
சாத்தான் இஸ்ரயேலருக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடும்படி தாவீதைத் தூண்டினான்.
2
எனவே தாவீது யோவாபிடமும், படைத் தலைவர்களிடமும், “நீங்கள் போய் பெயெர்செபா தொடங்கி தாண்வரை இருக்கும் இஸ்ரயேலரைக் கணக்கிடுங்கள். எத்தனைபேர் அங்கேயிருக்கிறார்கள் என்பதை நான் அறிந்துகொள்வதற்காக எனக்கு அதை அறிவியுங்கள்” என்றான்.
3
ஆனால் யோவாப் அவனிடம், “யெகோவா தனது இராணுவவீரரை இப்போது இருப்பதைவிட நூறுமடங்காகப் பெருகச்செய்வாராக. என் தலைவனாகிய அரசனே, அவர்கள் எல்லோரும் எனது தலைவரின் குடிமக்கள் அல்லவா? எனது தலைவர் ஏன் இதைச் செய்ய விரும்புகிறீர்? இஸ்ரயேலின்மேல் இந்தக் குற்றப்பழியை ஏன் கொண்டுவருகிறீர்?” என்று பதிலளித்தான்.
4
ஆனால் அரசனின் வார்த்தையோ யோவாப்பை மேற்கொண்டது. எனவே யோவாப் அவ்விடத்தை விட்டுப்போய் இஸ்ரயேல் முழுவதும் சுற்றித்திரிந்து எருசலேமுக்குத் திரும்பிவந்தான்.
5
யோவாப் தாவீதிடம் போர்செய்யும் வீரர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்தான். இஸ்ரயேலில் வாளேந்தும் வீரர்கள் பதினொரு இலட்சம்பேரும், யூதாவில் நாலு இலட்சத்து எழுபதாயிரம்பேரும் இருந்தனர்.
6
அரசனின் கட்டளை யோவாபுக்கு வெறுப்பூட்டியதனால், அவன் லேவியரையும், பென்யமீனியரையும் கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளவில்லை.
7
இக்கட்டளை இறைவனுக்கு ஏற்காததாய் இருந்தபடியால் அவர் இஸ்ரயேலைத் தண்டித்தார்.
8
அப்பொழுது தாவீது இறைவனிடம், “நான் இதைச் செய்தபடியால் பெரும் பாவம் செய்தேன். இப்பொழுதும் உமது அடியவனின் இந்தக் குற்றத்தை நீக்கிவிடும். நான் மகா புத்தியீனமான செயலைச் செய்தேன்” என மன்றாடினான்.
Settings