Skip to content

எரேமியா28

1
யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில், நான்காம் வருடம் ஐந்தாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா சொன்னது இதுவே, கிபியோன் ஊரானாகிய அசூரின் மகனான இவன், யெகோவாவின் ஆலயத்தில் ஆசாரியருக்கும், மற்ற எல்லா மக்களுக்கும் முன்பாக என்னிடம் சொன்னதாவது:
2
“இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘பாபிலோன் அரசனின் நுகத்தை முறிப்பேன்.
3
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார், இவ்விடத்திலிருந்து பாபிலோனுக்கு கொண்டுபோன யெகோவாவின் ஆலயத்திற்குரிய பொருட்கள் எல்லாவற்றையும் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இந்த இடத்திற்கு நான் கொண்டுவருவேன்.
4
பாபிலோனுக்குச் சென்ற யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் எகொனியாவையும், யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட எல்லோரையும் நான் இந்த இடத்திற்கு மீண்டும் கொண்டுவருவேன்.’ ஏனெனில் நான் ‘பாபிலோன் அரசனின் நுகத்தை உடைப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்’ என்றான்.”
5
அப்பொழுது எரேமியா, ஆசாரியருக்கும் யெகோவாவின் ஆலயத்தில் நின்றுகொண்டிருந்த எல்லா மக்களுக்கும் முன்பாக, இறைவாக்கினன் அனனியாவுக்குப் பதிலளித்தான்.
6
“ஆமென், யெகோவா அவ்வாறே செய்வாராக; பாபிலோனிலிருந்து யெகோவாவின் ஆலய பொருட்களையும், நாடுகடத்தப்பட்டோர் அனைவரையும், திரும்பவும் இந்த இடத்திற்குக் கொண்டுவருவதன் மூலம் நீ கூறிய வார்த்தைகளை யெகோவா நிறைவேற்றுவாராக.
7
ஆயினும், நீயும் எல்லா மக்களும் கேட்கத்தக்கதாக நான் இப்பொழுது கூறப்போவதற்குச் செவிகொடு.
8
உனக்கும் எனக்கும் முன்வாழ்ந்த இறைவாக்கு உரைப்போர், முற்காலம் தொடங்கியே அநேக நாடுகளுக்கும், பெரும் அரசுகளுக்கும் விரோதமாக யுத்தத்தையும், பேராபத்தையும், கொள்ளைநோயையும் பற்றி இறைவாக்கு கூறினார்கள்.
9
ஆனால் சமாதானத்தை இறைவாக்காகக் கூறுகிற இறைவாக்கினனின் முன்னறிவிப்பு நிறைவேறினால் மட்டுமே, அவன் உண்மையாக யெகோவாவினால் அனுப்பப்பட்டவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுவான்” என்றான்.
10
அப்பொழுது இறைவாக்கினன் அனனியா, இறைவாக்கினன் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.
11
அதன்பின் அனனியா எல்லா மக்களுக்கு முன்பாகவும், “யெகோவா கூறுவது இதுவே: இதைப்போலவே நான் எல்லா தேசத்தாரின் கழுத்திலிருந்தும், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் நுகத்தை இரண்டு வருடங்களுக்குள் உடைத்துப்போடுவேன் என்கிறார்” என்றான். இதைக் கேட்ட இறைவாக்கினன் எரேமியா தன் வழியே போனான்.
12
இறைவாக்கினன் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை இறைவாக்கினன் அனனியா முறித்துப்போட்ட சற்று நேரத்திற்குப்பின் எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது:
13
அவர் அவனிடம், நீ போய் அனனியாவிடம், “யெகோவா சொல்வது இதுவே: நீ மரத்தினாலான நுகத்தை உடைத்து விட்டாய்; ஆனால், அதற்குப் பதிலாக இரும்பினாலான நுகம் உனக்குக் கிடைக்கும்.
14
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: இந்த எல்லா நாடுகளும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்குப் பணிசெய்யும்படி அவர்களுடைய கழுத்தின்மேல் இரும்பு நுகத்தை வைப்பேன். அவர்கள் அவனுக்குப் பணிசெய்வார்கள். காட்டு மிருகங்களின்மேலும் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுப்பேன் என்று சொல்” என்றார்.
15
அப்பொழுது இறைவாக்கினன் எரேமியா, இறைவாக்கினன் அனனியாவிடம், “அனனியாவே! கேள், யெகோவா உன்னை அனுப்பவில்லை; ஆயினும் இந்த மக்கள் பொய்யை நம்பும்படி நீ அவர்களை தூண்டிவிட்டிருக்கிறாய்.
16
ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: நான் உன்னைப் பூமியிலிருந்து நீக்கிவிடப் போகிறேன். நீ யெகோவாவுக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசங்கித்திருக்கிறபடியால், இந்த வருடத்திலேயே நீ சாகப்போகிறாய்” என்றான்.
17
அப்படியே இறைவாக்கினன் அனனியா அதே வருடம் ஏழாம் மாதத்தில் இறந்தான்.
Use arrow keys to navigate
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options