Skip to content
ரோமர் 3:1-20

ரோமர் 3:1-20

1
ஆகவே, யூதனாயிருப்பதில் என்ன மேன்மை இருக்கிறது? விருத்தசேதனத்தில் என்ன பயன் இருக்கிறது?
2
எல்லாவகையிலும், அவர்களுக்கு மேன்மை இருக்கவே செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுடைய வார்த்தைகள் யூதர்களிடமே ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனவே.
3
சிலரிடம் விசுவாசமில்லாதிருந்தால் அதினாலென்ன? அவர்களுடைய விசுவாசக் குறைவு, இறைவனுடைய உண்மையை இல்லாமல் போகச்செய்யுமோ?
4
ஒருபோதும் இல்லை! மனிதர்கள் அனைவரும் பொய்யராக இருந்தாலும் இறைவனோ உண்மையுள்ளவராய் இருக்கிறார். “நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவர் என்றும், நீர் நியாயம் விசாரிக்கும்போது உமது தீர்ப்பு வெற்றியடையும் என நிரூபிக்கப்படுகிறது” என்று எழுதியிருக்கிறதே.
5
இவ்விதமாய் நம்முடைய அநீதி இறைவனுடைய நீதியை அதிகமாய்த் தெளிவுபடுத்தப்படுகிறது என்று சொன்னால், நாம் என்ன சொல்லுவோம்? அப்பொழுது இறைவன் நம்மேல் தமது கோபத்தை வரப்பண்ணினால், இறைவன் அநீதியுள்ளவர் என்று சொல்லலாமா? நான் இதை மனித வழக்கமாகவே வாதாடுகிறேன்.
6
நிச்சயமாக அவர் அப்படிப்பட்டவரல்ல. அப்படியிருக்குமானால், உலகத்தை நியாயந்தீர்க்க இறைவனால் எப்படி முடியும்?
7
“என்னுடைய பொய் இறைவனுடைய சத்தியத்தை உயர்வுபடுத்தி, அப்படியே அவருடைய மகிமையை அதிகரிக்கச் செய்யுமானால், நான் ஏன் இன்னும் பாவி என்று தீர்ப்பிடப்படுகிறேன்?” என்று ஒருவர் வாதாடலாம்.
8
அப்படியானால், “நன்மை வரும்படி தீமை செய்வோம்” என்று ஏன் சொல்லக்கூடாது? நாங்களும் அப்படிச் சொல்வதாகவே சிலரால் பொய்யாகத் தூற்றப்படுகிறோம். ஆகவே இப்படியானவர்களைக் குற்றவாளிகளெனத் தீர்ப்பது நியாயமானதே!
9
எனவே, நாம் என்ன முடிவுக்கு வருவோம்? யூதர்களாகிய நாங்கள் மேன்மையானவர்களா? ஒருபோதும் இல்லை. யூதர்களும் யூதரல்லாத மக்களும் வேறுபாடின்றி, பாவத்திற்குட்பட்டு இருக்கிறார்கள் என்று நாங்கள் ஏற்கெனவே எடுத்துக் காட்டினோம்.
10
அத்துடன் வேதப்புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி: “நீதிமான் ஒருவனுமில்லை, ஒருவனாகிலும் இல்லை;
11
விளங்கிக்கொள்கிறவன் ஒருவனுமில்லை, இறைவனைத் தேடுகிறவன் ஒருவனுமில்லை.
12
எல்லோரும் வழிவிலகி, ஒன்றாக உதவாதவர்களாய்ப் போய்விட்டார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை, ஒருவனாகிலுமில்லை.”
13
“அவர்களுடைய தொண்டைகள்; திறந்திருக்கிறப் பிரேதக்குழிகள்.” “அவர்களுடைய நாவுகள், வஞ்சனை பேசுகின்றன. விரியன் பாம்புகளின் விஷம் அவர்கள் உதடுகளில் இருக்கிறது.”
14
“அவர்களுடைய வாய்கள் சாபத்தினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கின்றன.”
15
“அவர்களுடைய கால்கள் இரத்தம் சிந்துவதற்கு விரைகின்றன;
16
அழிவும் அவலமும் அவர்கள் வழிகளைப் பின்பற்றுகின்றன.
17
சமாதான வழியோ, அவர்களுக்குத் தெரியாது.”
18
“அவர்களுடைய கண்களில் இறைவனைப்பற்றிய பயம் இல்லை.”
19
மோசேயின் சட்டத்தில் சொல்லப்படுவதெல்லாம், மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கே சொல்லப்படுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே யாரும் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் மவுனமாகும்படியாகவும் இவை எழுதப்பட்டுள்ளன. இவ்வாறு முழு உலகமும் இறைவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாயும் இருக்கிறார்கள்.
20
ஆகவே, மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்வதனால், ஒருவரும் இறைவனுடைய பார்வையில் நீதிமான்கள் ஆக்கப்படுவதில்லை; ஆனால், மோசேயின் சட்டத்தின் மூலமாக, நாம் பாவத்தைப்பற்றிய உணர்வுள்ளவர்கள் ஆகிறோம்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options