சங்கீதம் 50:1-15
1
ஆசாபின் சங்கீதம். வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவா பேசுகிறார், அவர் சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, அது மறையும் இடம் வரையுமுள்ள முழு உலகத்தையும் அழைக்கிறார்.
2
பூரண அழகுள்ள சீயோனிலிருந்து இறைவன் பிரகாசிக்கிறார்.
3
நம்முடைய இறைவன் வருகிறார், அவர் மவுனமாய் இருக்கமாட்டார்; அவருக்கு முன்னாக நெருப்பு சுட்டெரித்துச் செல்கிறது; அவரைச் சுற்றிப் புயல் சீற்றத்துடன் வீசுகிறது.
4
அவர் தமது மக்களை நியாயந்தீர்க்கும்படியாக, மேலேயுள்ள வானங்களையும் பூமியையும் அழைத்துச் சொல்கிறார்:
5
“பலியினால் என்னுடன் உடன்படிக்கை செய்த, பரிசுத்தவான்களை ஒன்றுகூட்டுங்கள்.”
6
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கின்றன; அவர் நியாதிபதியாகிய இறைவன்.
7
“என் மக்களே, கேளுங்கள், நான் பேசுவேன்; இஸ்ரயேலே, நான் உனக்கு விரோதமாகச் சாட்சி கூறுவேன்: நான் இறைவன், நானே உங்கள் இறைவன்.
8
எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கும் உங்கள் பலிகளுக்காகவோ, அல்லது உங்கள் தகன காணிக்கைகளுக்காகவோ நான் உங்களைக் கண்டிக்கவில்லை.
9
உங்கள் வீட்டிலிலுள்ள காளைகளோ, உங்கள் தொழுவத்திலுள்ள வெள்ளாடுகளோ எனக்கு வேண்டியதில்லை.
10
ஏனெனில் காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஆயிரக்கணக்கான குன்றுகளிலுள்ள ஆடுமாடுகளும் என்னுடையவைகள்.
11
மலைகளிலுள்ள ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்; வயல்வெளிகளிலுள்ள உயிரினங்களும் என்னுடையவைகள்.
12
நான் பசியாயிருந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன்; ஏனெனில் உலகமும் அதிலுள்ள யாவும் என்னுடையவைகள்.
13
நான் காளைகளின் இறைச்சியை உண்டு, ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தைக் குடிப்பேனோ?
14
“நீங்கள் இறைவனாகிய எனக்கு உங்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிடுங்கள்; மகா உன்னதமான இறைவனாகிய எனக்கு உங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுங்கள்.
15
துன்ப நாளில் என்னை நோக்கி மன்றாடிக் கூப்பிடுங்கள், நான் உங்களை விடுவிப்பேன்; நீங்கள் என்னை மகிமைப்படுத்துவீர்கள்.”
Settings