சங்கீதம் 31:14-24
14
ஆனாலும் யெகோவாவே, நான் உம்மிலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்; “நீரே என் இறைவன்” என்று நான் சொன்னேன்.
15
என் நாட்கள் உமது கரங்களில் இருக்கிறது; என் பகைவரிடமிருந்தும் என்னைத் துரத்துகிறவரிடமிருந்தும் விடுவியும்.
16
உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்; உமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைக் காப்பாற்றும்.
17
யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில் மவுனமாய்க் கிடக்கட்டும்.
18
பெருமையோடும் அகந்தையோடும், நீதிமான்களுக்கு விரோதமாய்ப் பேசும் அவர்களுடைய பொய் உதடுகள் ஊமையாகட்டும்.
19
உமக்குப் பயப்படுகிறவர்களுக்காக நீர் குவித்து வைத்திருக்கும் நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன; உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறவர்கள்மேல், மனிதர் காணும்படியாக நீர் பொழிகின்ற நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன.
20
நீர் அவர்களை மனிதரின் சூழ்ச்சிகளிலிருந்து விலக்கி, உமது சமுகத்தின் அடைக்கலத்தில் மறைத்துவைக்கிறீர்; அவர்களைக் குற்றப்படுத்தும் நாவுகளுக்கு விலக்கி, உமது தங்குமிடத்தில் அவர்களை ஒளித்துவைக்கிறீர்.
21
யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, ஏனெனில் பட்டணம் முற்றுகையிடப்பட்டு நான் சிக்கலில் இருந்தபோது, அவர் தமது உடன்படிக்கை அன்பின் அதிசயத்தை எனக்குக் காண்பித்தார்.
22
நான் அதிர்ச்சியடைந்து, “உமது பார்வையிலிருந்து அகற்றப்பட்டேன்” என்று சொன்னேன்; ஆனாலும் நான் உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, இரக்கத்திற்காக நான் கதறி அழுததை நீர் கேட்டீர்.
23
யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, அவரில் அன்புகூருங்கள்! யெகோவா அவருக்கு உண்மையாய் இருப்பவர்களைப் பாதுகாக்கிறார்; ஆனால் பெருமையுள்ளவர்களுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.
24
யெகோவாவை நம்பிக் காத்திருப்பவர்களே, நீங்கள் எல்லோரும் பெலன்கொண்டு தைரியமாய் இருங்கள்.
Settings