சங்கீதம் 106:13-33
13
ஆனாலும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவாய் மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை.
14
பாலைவனத்தில் இருக்கும்போதே, அவர்கள் தங்கள் இச்சைக்கு இடங்கொடுத்தார்கள்; பாழ்நிலத்திலே அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள்.
15
எனவே அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குக் கொடுத்தார்; ஆனாலும் மனச்சோர்வை அவர்கள்மேல் அனுப்பினார்.
16
அவர்கள் முகாமில் இருக்கும்போது மோசேயின்மீதும், யெகோவாவுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஆரோன் மீதும் பொறாமை கொண்டார்கள்.
17
பூமி பிளந்தது, தாத்தானை விழுங்கியது; அபிராமோடு சேர்ந்திருந்தவர்களையும் புதைத்துப் போட்டது.
18
அவர்களைப் பின்பற்றியவர்களின் மத்தியில் நெருப்புப் பற்றியெரிந்தது; கொடியவர்களை ஒரு சுவாலை எரித்து அழித்துப்போட்டது.
19
அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, உலோகத்தால் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை வழிபட்டார்கள்.
20
அவர்கள் தங்கள் மகிமையான இறைவனைவிட்டு, புல்லைத் தின்னும் மாட்டின் உருவத்தைப் பற்றிக்கொண்டார்கள்.
21
எகிப்திலே பெரிய காரியங்களைச் செய்து, தங்களைக் காப்பாற்றிய இறைவனை அவர்கள் மறந்தார்கள்.
22
காமின் நாட்டிலே அற்புதங்களையும், செங்கடலிலே பிரமிக்கத்தக்க செயல்களையும் செய்தவரை மறந்தார்கள்.
23
ஆதலால் அவர் அவர்களை அழிக்கப்போவதாகக் கூறினார்; யெகோவாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, யெகோவாவுக்கும் மக்களுக்கும் இடையில் நின்று அவருடைய கோபம் அவர்களை அழிக்காதபடிக்கு கெஞ்சினான்.
24
அதின்பின் அவர்கள் நலமான அந்நாட்டை அலட்சியம் செய்தார்கள்; அவருடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் விசுவாசிக்கவில்லை.
25
தங்கள் கூடாரங்களில் அவர்கள் முறுமுறுத்து, யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதிருந்தார்கள்.
26
ஆகையால் அவர் அவர்களைப் பாலைவனத்திலேயே இறந்துபோகும்படி தமது கையை உயர்த்தி அவர்களுக்கு ஆணையிட்டார்.
27
அவர்களுடைய சந்ததிகளை பிற நாடுகளிலே சிதறடித்து, அவர்களை நாடெங்கும் பரவச்செய்தார்.
28
அப்பொழுது அவர்கள் தங்களைப் பேயோரிலுள்ள பாகாலுடன் இணைத்துக் கொண்டு, உயிரற்ற தெய்வங்களுக்குப் படைக்கப்பட்ட பலிகளைச் சாப்பிட்டார்கள்.
29
இப்படி அவர்கள் தங்கள் கொடுமையான செயல்களினால் யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்; அதினால் அவர்களுக்குள்ளே ஒரு கொள்ளைநோய் பரவியது.
30
ஆனால் பினெகாஸ் எழுந்து தலையிட்டதால், அந்தக் கொள்ளைநோய் நிறுத்தப்பட்டது.
31
அந்த செயல் என்றென்றும் தலைமுறை தலைமுறையாக அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
32
மேரிபாவின் தண்ணீர் அருகேயும் அவர்கள் யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்; மோசேக்கும் அதினால் துன்பம் ஏற்பட்டது.
33
இறைவனுடைய ஆவியானவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தபடியால், மோசேயின் உதடுகளிலிருந்து கடுமையான வார்த்தைகள் வெளிவந்தன.
Settings