லேவியராகமம் 25:39-55
39
“ ‘உங்கள் நாட்டவரில் ஒருவன் உங்களுக்குள் ஏழையாகி தன்னை விற்றால், அவனை அடிமையாக வேலைசெய்ய வைக்கவேண்டாம்.
40
அவன் ஒரு கூலிக்காரனைப் போலவும், உங்களிடம் வந்த தற்காலிக குடியிருப்பாளனைப் போலவும் நடத்தப்படவேண்டும். யூபிலி வருடம்வரை அவன் உங்களுக்குப் பணிசெய்ய வேண்டும்.
41
அதன்பின் அவனும் அவன் பிள்ளைகளும் விடுவிக்கப்பட வேண்டும். அவன் தன் சொந்தக் கோத்திரத்திற்கும் முற்பிதாக்களின் சொத்து நிலத்திற்கும் திரும்பிப் போகவேண்டும்.
42
எகிப்து நாட்டிலிருந்து நான் வெளியே கொண்டுவந்த இஸ்ரயேலர் என் பணியாட்களாய் இருப்பதால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படக்கூடாது.
43
அவர்களை நீங்கள் கொடூரமாய் ஆளுகை செய்யாமல் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள்.
44
“ ‘உங்களைச் சுற்றியிருக்கிற நாடுகளிடமிருந்தே உங்களுக்கு ஆண் அடிமைகளும், பெண் அடிமைகளும் வரவேண்டும். அவர்களிடமிருந்தே நீங்கள் அடிமைகளை வாங்கலாம்.
45
உங்கள் மத்தியில் வசிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களில் சிலரை அடிமைகளாக வாங்கலாம். உங்கள் நாட்டில் பிறந்த அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களையும் வாங்கலாம். அவர்கள் உங்கள் சொத்துக்களாவார்கள்.
46
நீங்கள் அவர்களை உங்கள் பிள்ளைகளுக்கு உரிமைச்சொத்தாக எழுதிக்கொடுத்து, அவர்களை ஆயுட்கால அடிமைகளாக்கலாம். ஆனால் உங்கள் சகோதரராகிய இஸ்ரயேலரைக் கொடூரமாய் ஆளுகை செய்யக்கூடாது.
47
“ ‘உங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ அல்லது தற்காலிக குடியிருப்பாளனோ செல்வந்தனாயிருக்கையில் உங்கள் நாட்டவரில் ஒருவன் ஏழையாகி, அந்த பிறநாட்டினனுக்கோ அல்லது பிற நாட்டு வம்சத்தைச் சேர்ந்த அங்கத்தினருக்கோ தன்னை விற்றால்,
48
தன்னை விற்றுவிட்ட பின்பும் தன்னை மீட்டுக்கொள்ளும் உரிமையுடையவனாய் இருக்கிறான். அவனுடைய உறவினருக்குள் ஒருவன் அவனை மீட்கலாம்:
49
அவனுடைய சிறிய தகப்பனோ அல்லது சிறிய தகப்பனுடைய மகனோ அல்லது அவனுடைய வம்சத்தைச் சேர்ந்த இரத்த உறவினனோ அவனை மீட்டுக்கொள்ளலாம். அல்லது அவன் செழிப்படையும்போது தன்னைத்தானே மீட்டுக்கொள்ளவும் முடியும்.
50
அவனும், அவனை வாங்கியவனும் அவன் தன்னை விற்ற வருடத்திலிருந்து யூபிலி வருடம் வரையுள்ள காலத்தைக் கணக்கிடவேண்டும். ஒரு கூலியாளுக்குச் செலுத்தப்படுகின்ற கூலி அளவை அடிப்படையாகக்கொண்டு அவனுக்குரிய விடுதலைக்கான விலை அமையவேண்டும்.
51
இன்னும் அநேக வருடங்கள் இருக்குமானால், தனக்காகச் செலுத்தப்பட்ட விலைமதிப்பின் ஒரு பெரிய பங்கை அவன் தன்னுடைய மீட்புக்காகச் செலுத்தவேண்டும்.
52
யூபிலி வருடத்திற்கு இன்னும் சில வருடங்கள் மட்டுமே இருக்குமானால், அவன் அதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப தன் மீட்புக்கான பணத்தைக் கொடுக்கலாம்.
53
அவன் வருடத்திற்கு வருடம் கூலிக்கு அமர்த்தப்பட்டவன்போல் நடத்தப்படவேண்டும். அவனுடைய எஜமான் அவனைக் கொடூரமாய் நடத்தாதபடி நீங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.
54
“ ‘இவ்விதமாக, எந்த வழிகளிலாவது அவன் மீட்கப்படாவிட்டாலும், அவனும் அவனுடைய பிள்ளைகளும், யூபிலி வருடத்தில் விடுதலையாக்கப்பட வேண்டும்.
55
ஏனெனில், இஸ்ரயேலர் என் பணியாட்களாக எனக்கு சொந்தமாயிருக்கிறார்கள். அவர்கள் நான் எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த பணியாட்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
Settings