Skip to content
நியாயாதிபதிகள் 20:1-11

நியாயாதிபதிகள் 20:1-11

1
அப்போது தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள எல்லா இஸ்ரயேல் மக்களும், கீலேயாத் மக்களோடு ஒரே மனதுடனே, யெகோவா முன்பாக மிஸ்பாவிலே ஒன்றுகூடி நின்றனர்.
2
இஸ்ரயேல் கோத்திரத்தின் எல்லாத் தலைவர்களும் இறைவனுடைய மக்கள் சபையில் தங்கள் இடங்களில் நின்றனர். அங்கு நாலு இலட்சம் வால் ஏந்தும் போர்வீரர்களும் இருந்தனர்.
3
இஸ்ரயேலர் மிஸ்பாவிலே ஒன்றுகூடியிருக்கிறார்கள் என பென்யமீன் மக்கள் கேள்விப்பட்டனர். அப்பொழுது இஸ்ரயேலர், “இக்கொடிய செயல் நடந்தது எப்படி?” எனக் கேட்டனர்.
4
அதற்கு கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவனான அந்த லேவியன், “நானும் எனது வைப்பாட்டியும் இரவு தங்குவதற்காக பென்யமீனியர் இருக்கும் கிபியாத்திற்கு வந்தோம்.
5
அன்று இரவு கிபியாத்தின் மனிதர்கள் எனக்குப்பின் வந்து நான் இருந்த வீட்டைச் சுற்றிவளைத்து என்னைக் கொலைசெய்ய எத்தனித்தார்கள். அவர்கள் எனது வைப்பாட்டியை கற்பழித்ததால் அவள் இறந்தாள்.
6
இஸ்ரயேலில் இக்காமவெறி பிடித்த செய்யத்தகாத கொடுமையை இவர்கள் செய்ததினால், நான் எனது வைப்பாட்டியின் உடலைத் துண்டுகளாக வெட்டி, இஸ்ரயேலின் உரிமைச்சொத்தான எல்லா இடங்களுக்கும் அனுப்பினேன்.
7
இப்பொழுது இஸ்ரயேலராகிய நீங்கள் எல்லாரும் இதைப் பற்றிப்பேசி, உங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள்” என்று சொன்னான்.
8
அப்பொழுது எல்லா மக்களும் ஒன்றுசேர்ந்து, “நாங்கள் யாரும் எங்கள் வீடுகளுக்குப் போகமாட்டோம். எங்களில் ஒருவனும் தன் வீடுகளுக்குத் திரும்புவதில்லை.
9
இப்பொழுது நாங்கள் கிபியாவிற்கு செய்யப்போவது இதுவே. சீட்டுப்போட்டு அதன்படி அதற்கெதிராகப் போவோம்.
10
நாங்கள் இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலிருந்தும் ஒவ்வொரு நூறு பேரிலும் பத்துப்பேரையும், ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் நூறு பேரையும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரிலும் ஆயிரம்பேரையும் படைவீரருக்கு உணவு கொண்டுவருவதற்குத் தெரிந்தெடுப்போம். அதன்பின் படைவீரர் பென்யமீனிலுள்ள கிபியாவுக்கு வந்துசேர்ந்ததும், இஸ்ரயேலில் கிபியோனியர் செய்த இந்தக் கேவலமான செயலுக்காக அந்த படைவீரர் தண்டனை கொடுப்பார்கள்” என்றனர்.
11
எனவே இஸ்ரயேலில் எல்லா மனிதர்களும் ஒரே மனதுடையவர்களாய் அப்பட்டணத்திற்கு எதிராக ஒன்றுசேர்ந்தனர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options