நியாயாதிபதிகள் 18:23-31
23
அவர்கள் தாண் மக்களை நோக்கிச் சத்தமிட்டார்கள். தாண் மக்கள் திரும்பிப்பார்த்து மீகாவிடம், “நீ இந்த மனிதர்களை சண்டையிட அழைத்து வருவதற்கு இப்போது உனக்கு என்ன நடந்துவிட்டது” என்று கேட்டார்கள்.
24
அதற்கு மீகா, “நான் உருவாக்கிய எனது தெய்வங்களை நீங்கள் எடுத்து விட்டீர்கள். என் பூசாரியையும் கூட்டிப்போய் விட்டீர்கள். என்னிடம் வேறு என்ன இருக்கிறது. அப்படியிருக்க உனக்கு என்ன நடந்தது என்று நீங்கள் எப்படிக் கேட்க முடியும்?” என்று கேட்டான்.
25
தாண் கோத்திரத்தார் மீகாவைப் பார்த்து, “எங்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். பண்ணினால் முற்கோபக்காரர் உங்களைத் தாக்குவார்கள். நீயும் உன் குடும்பத்தாரும் உயிரை இழக்க நேரிடும்” என்றார்கள்.
26
தாண் கோத்திரத்தார் தங்கள் வழியே போனார்கள். மீகாவும் அவர்கள் தன்னைவிட வலிமையுள்ளவர்கள் எனக் கண்டு திரும்பி வீட்டிற்குப் போனான்.
27
அப்பொழுது தாண் மக்கள் மீகா செய்திருந்த தெய்வங்களை எடுத்துக்கொண்டு, அவனுடைய பூசாரியையும் கூட்டிக்கொண்டு லாயீசுக்கு அங்கே அமைதியோடும், தன்னம்பிக்கையோடும் வாழ்ந்த மக்களுக்கு விரோதமாய்ப் போனார்கள். அவர்கள் அங்குள்ளவர்களை வாளால் வெட்டி அப்பட்டணத்தைத் தீக்கிரையாக்கினார்கள்.
28
அப்பட்டணத்து மக்கள் சீதோனுக்கு வெகுதொலைவில் இருந்தபடியாலும், வேறு ஒருவருடனும் தொடர்பற்றிருந்ததாலும் அவர்களைக் காப்பாற்ற யாருமே இருக்கவில்லை. அப்பட்டணம் பெத் ரேகோப் அருகேயுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இருந்தது. தாண் மக்கள் பட்டணத்தைத் திரும்பவும் கட்டி, அங்கே குடியேறினார்கள்.
29
பின்பு அவர்கள் லாயீசு என்று அழைக்கப்பட்ட அப்பட்டணத்திற்கு, “தாண்” என்று பெயரிட்டார்கள். தாண் என்பவன் இஸ்ரயேலுக்குப் பிறந்த முற்பிதாக்களில் ஒருவனாயிருந்தான்.
30
அங்கே, தாண் மக்கள் விக்கிரகங்களைத் தங்களுக்குத் தெய்வமாக வைத்துக்கொண்டார்கள். மோசேயின் பேரனும், கெர்சோமின் மகனுமான யோனத்தானும் அவனுடைய மகன்களும் நாடு சிறைப்பட்டுப்போன நாள்வரைக்கும், தாண் கோத்திரத்திற்கு பூசாரிகளாக இருந்தார்கள்.
31
இறைவனின் ஆலயம் சீலோவில் இருந்த காலமெல்லாம் அவர்கள் மீகா உருவாக்கிய விக்கிரகங்களைத் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள்.
Settings