Skip to content
நியாயாதிபதிகள் 18:14-26

நியாயாதிபதிகள் 18:14-26

14
அப்பொழுது லாயீசை உளவுபார்த்து வந்த அந்த ஐந்து மனிதர்களும் தங்கள் சகோதரர்களிடம், “இந்த வீடுகளில் ஒன்றில் ஏபோத்தும், வீட்டு தெய்வங்களும், செதுக்கப்பட்ட உருவச்சிலையும் வார்க்கப்பட்ட விக்கிரகமும் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும்தானே” என்று சொன்னார்கள்.
15
எனவே அவர்கள் வாலிபனான லேவியன் இருந்த மீகாவின் வீட்டின் பக்கம் சென்று அவனை வாழ்த்தினார்கள்.
16
அப்பொழுது தாணிலிருந்து யுத்த ஆயுதந்தரித்த அறுநூறு வீரர்களும் அந்த நுழைவாசலில் நின்றனர்.
17
பூசாரியும், ஆயுதம் தாங்கிய வீரர்களும் நுழைவாசலில் நிற்கையில், நாட்டை உளவுபார்க்க வந்த ஐந்து வீரர்களும் உள்ளே சென்று, அங்கிருந்த செதுக்கிய சிலையையும், ஏபோத்தையும், மற்ற வீட்டு தெய்வங்களையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்தார்கள்.
18
இந்த ஐந்து மனிதர்கள் மீகாவின் வீட்டிற்குள்ளே சென்று செதுக்கிய சிலையையும், ஏபோத்தையும், மற்ற தெய்வங்களையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுப்பதைக்கண்ட பூசாரி, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
19
அதற்கு அவர்கள், “அமைதியாய் இரு! ஒரு வார்த்தையும் பேசாதே! எங்களுடன் வந்து எங்கள் தகப்பனாகவும், பூசாரியாகவும் இரு. ஒருவனின் வீட்டிற்குப் பூசாரியாக இருப்பதைவிட, இஸ்ரயேலின் கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் பூசாரியாயிருப்பது நல்லதல்லவா” எனக் கேட்டனர்.
20
அப்பொழுது பூசாரி மகிழ்ச்சியடைந்தான். அவன் ஏபோத்தையும், மற்றும் வீட்டு தெய்வங்களையும், செதுக்கப்பட்ட சிலையையும் எடுத்துக்கொண்டு அவர்களோடு போனான்.
21
அவர்கள் தங்கள் சிறுபிள்ளைகள், ஆடுமாடுகள், தங்களிடமிருந்த விலையுயர்ந்த பொருட்களையெல்லாம் தங்களுக்கு முன்னே அனுப்பி, அவர்களும் அந்த இடத்தைவிட்டுப் போனார்கள்.
22
அந்த மனிதர்கள் மீகாவின் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் போய்க்கொண்டிருக்கையில், மீகாவின் அயல் வீட்டார் அழைக்கப்பட்டு, தாண் மக்களைப் பின்தொடர்ந்து நெருங்கி வந்தார்கள்.
23
அவர்கள் தாண் மக்களை நோக்கிச் சத்தமிட்டார்கள். தாண் மக்கள் திரும்பிப்பார்த்து மீகாவிடம், “நீ இந்த மனிதர்களை சண்டையிட அழைத்து வருவதற்கு இப்போது உனக்கு என்ன நடந்துவிட்டது” என்று கேட்டார்கள்.
24
அதற்கு மீகா, “நான் உருவாக்கிய எனது தெய்வங்களை நீங்கள் எடுத்து விட்டீர்கள். என் பூசாரியையும் கூட்டிப்போய் விட்டீர்கள். என்னிடம் வேறு என்ன இருக்கிறது. அப்படியிருக்க உனக்கு என்ன நடந்தது என்று நீங்கள் எப்படிக் கேட்க முடியும்?” என்று கேட்டான்.
25
தாண் கோத்திரத்தார் மீகாவைப் பார்த்து, “எங்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். பண்ணினால் முற்கோபக்காரர் உங்களைத் தாக்குவார்கள். நீயும் உன் குடும்பத்தாரும் உயிரை இழக்க நேரிடும்” என்றார்கள்.
26
தாண் கோத்திரத்தார் தங்கள் வழியே போனார்கள். மீகாவும் அவர்கள் தன்னைவிட வலிமையுள்ளவர்கள் எனக் கண்டு திரும்பி வீட்டிற்குப் போனான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options