யோபு 38:22-38
22
“உறைபனியின் களஞ்சியங்களுக்குள் நீ போயிருக்கிறாயோ? பனிக்கட்டி மழையின் களஞ்சியங்களைக் கண்டிருக்கிறாயோ?
23
கஷ்ட காலத்திலும், கலகமும் யுத்தமும் வரும் நாட்களிலும் பயன்படுத்தும்படி நான் அவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.
24
மின்னல் புறப்படும் இடத்திற்கு வழி எங்கே? கீழ்காற்று பூமியின்மேல் வீசுவதற்கான வழி எங்கே?
25
பலத்த மழைக்கு வாய்க்காலை வெட்டுபவர் யார்? இடி மின்னலோடு வரும் மழைக்கு வழியை ஏற்படுத்துகிறவர் யார்?
26
ஒருவரும் குடியிராத நிலத்திற்கும், எவருமே இல்லாத பாலைவனத்திற்கும் பசுமையைக் கொடுப்பதற்காகவும்,
27
வனாந்திரமான பாழ்நிலத்தை பசுமையாக்கி, அதில் புல் பூண்டுகளை முளைக்கப்பண்ணும்படி செய்கிறவர் யார்?
28
மழைக்கு ஒரு தகப்பன் உண்டோ? பனித்துளிகளைப் பெற்றெடுத்தவர் யார்?
29
யாருடைய கருப்பையிலிருந்து பனிக்கட்டி வருகிறது? வானங்களிலிருந்து வரும் உறைபனியைப் பெற்றெடுக்கிறவர் யார்?
30
தண்ணீர்கள் கல்லைப்போலவும், ஆழத்தின் மேற்பரப்பு உறைந்துபோகவும் செய்கிறவர் யார்?
31
“அழகான கார்த்திகை நட்சத்திரத்தை நீ இணைக்கமுடியுமோ? மிருகசீரிட நட்சத்திரத்தைக் கட்டவிழ்க்க உன்னால் முடியுமோ?
32
விடிவெள்ளிக் கூட்டங்களை அதினதின் காலத்தில் கொண்டுவருவாயோ? சிம்மராசி நட்சத்திரத்தையும் அதின் கூட்டத்தையும் வழிநடத்த உன்னால் முடியுமோ?
33
வானமண்டலத்தை ஆளும் சட்டங்களை நீ அறிவாயோ? பூமியின்மேல் அவைகளின் ஆட்சியை நீ அமைப்பாயோ?
34
“நீ மேகங்களுக்குச் சத்தமிட்டுச் சொல்லி வெள்ளம் உன்னை மூடும்படிச் செய்வாயோ?
35
மின்னல்களின் தாக்குதல்களை அதின் வழியிலே அனுப்புவது நீயா? ‘இதோ பார், நாங்கள் இருக்கிறோம்’ என அவை உன்னிடம் அறிவிக்குமோ?
36
இருதயத்தை ஞானத்தால் நிரப்பியவரும், மனதுக்கு விளங்கும் ஆற்றலைக் கொடுத்தவரும் யார்?
37
யாருக்கு மேகங்களைக் கணக்கிடும் ஞானம்? வானத்தின் தண்ணீர்ச் சாடிகளை,
38
தூசியானது மண்கட்டிகளாகி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?
Settings