Skip to content
யோபு 28:12-28

யோபு 28:12-28

12
ஆனால் ஞானம் காணப்படுவது எங்கே? விளங்கும் ஆற்றல் குடியிருப்பது எங்கே?
13
மனிதன் அதின் மதிப்பைப் புரிந்துகொள்வதில்லை; உயிர்வாழ்வோரின் நாட்டில் அதைக் காணமுடியாது.
14
“அது என்னிடம் இல்லை” என ஆழம் சொல்கிறது; “அது என்னுடன் இல்லை” என கடலும் கூறுகிறது.
15
சுத்தத் தங்கத்தைக் கொடுத்து, அதை வாங்கமுடியாது, அதின் மதிப்பை வெள்ளியால் நிறுக்கவும் முடியாது.
16
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
17
பொன்னும் பளிங்கும் அதற்கு இணையாகாது, தங்க நகைகளைக் கொடுத்தும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது.
18
பவளத்தையும் மரகதத்தையும் ஒரு பொருட்டாக எண்ண முடியாது; ஞானத்தின் விலை மாணிக்கக் கற்களைவிட உயர்வானது.
19
எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; சுத்தப் பொன்னால் அதை வாங்கமுடியாது.
20
அப்படியானால் ஞானம் எங்கிருந்து வருகிறது? விளங்கும் ஆற்றல் எங்கே குடியிருக்கிறது?
21
அது உயிருள்ள அனைவருக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்குங்கூட மறைக்கப்பட்டும் இருக்கிறது.
22
“இதைப் பற்றிய வதந்தி மட்டுமே எங்கள் காதுகளுக்கு எட்டின” என்று அழிவும் சாவும் சொல்கின்றன.
23
அதின் வழி இறைவனுக்குத் தெரியும்; அதின் குடியிருப்பை அவர் மட்டுமே அறிவார்.
24
ஏனெனில் பூமியின் கடைமுனைகளை அவர் பார்க்கிறார், வானத்தின் கீழுள்ள ஒவ்வொன்றையும் அவர் காண்கிறார்.
25
அவர் காற்றின் பலத்தை நிலைநாட்டி, தண்ணீர்களை அளந்தபோதும்,
26
மழைக்கு ஒரு நியமத்தை விதித்தபோதும், இடிமுழக்கத்தோடு கூடிய மின்னலுக்கு ஒரு பாதையை வகுத்தபோதும்,
27
அவர் ஞானத்தைப் பார்த்து மதிப்பிட்டார்; அதை உறுதிப்படுத்தி சோதித்தறிந்தார்.
28
இறைவன் மனிதனிடம், “யெகோவாவுக்கு பயந்து நடத்தலே ஞானம், தீமைக்கு விலகி நடப்பதே விளங்கும் ஆற்றல்” என்று சொன்னார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options