Skip to content
யோபு 14:1-12

யோபு 14:1-12

1
“பெண்ணினால் பெற்றெடுக்கப்பட்ட மனிதன் சில நாட்களே வாழ்கிறான், அவையும் கஷ்டம் நிறைந்தவையே.
2
அவன் ஒரு பூவைப்போல் பூத்து வாடிப்போகிறான்; அவன் நிழலைப்போல் நிலையற்று மறைந்துபோகிறான்.
3
அப்படிப்பட்டவனை நீர் கூர்ந்து கவனிப்பீரோ? அவனை நியாயந்தீர்ப்பதற்காக உமக்கு முன்பாகக் கொண்டுவருவீரோ?
4
அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை உருவாக்க யாரால் முடியும்? யாராலுமே முடியாது!
5
மனிதனுடைய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன; அவனுடைய மாதங்களையும் நீரே நிர்ணயித்திருக்கிறீர், அவன் கடக்கமுடியாத எல்லைகளைக் குறித்திருக்கிறீர்.
6
ஒரு கூலியாள் தன் அன்றாட வேலை முடிந்தது என்று நிம்மதியாய் இருக்கிறானே. அதுபோல் நீரும் மனிதன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.
7
“மரத்திற்குக்கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டு: அது வெட்டிப்போடப்பட்டாலும் மீண்டும் தழைக்கும்; அதின் புதிய தளிர்கள் தவறாது முளைக்கும்.
8
அதின் வேர் நிலத்தினடியில் பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,
9
தண்ணீர் பட்டவுடனே அது துளிர்விட்டு ஒரு செடியைப்போல் கிளைவிட்டு வளரும்.
10
மனிதனோ இறந்தபின், தன் இறுதி மூச்சைவிட்டு இல்லாதொழிந்து போகிறான்.
11
கடல் தண்ணீர் வற்றி, வெள்ளம் வறண்டு கிடப்பதுபோலவும்
12
மனிதன் படுத்துக்கிடக்கிறான், அவன் வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை; தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options