Skip to content
எரேமியா 46:13-26

எரேமியா 46:13-26

13
பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எகிப்தைத் தாக்க வருவதைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு யெகோவா கூறிய செய்தி இதுவே:
14
“எகிப்தில் இதை அறிவியுங்கள், மிக்தோலில் பிரசித்தப்படுத்துங்கள்; மெம்பிசிலும், தக்பானேஸிலும் அதைப் பிரசித்தப்படுத்துங்கள். ‘வாள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை இரையாக்குகிறது. அதனால் நீங்கள் நிலைகொண்டு ஆயத்தமாகுங்கள்.’
15
உங்களுடைய போர்வீரர் ஏன் கீழே விழவேண்டும்? அவர்கள் நிற்க மாட்டார்கள், ஏனெனில் யெகோவா அவர்களைக் கீழே தள்ளிவிடுவார்.
16
அவர்கள் திரும்பத்திரும்ப இடறுவார்கள். அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் விழுவார்கள். அவர்கள், ‘எழுந்திருங்கள்; ஒடுக்குகிறவனுடைய வாளுக்குத் தப்பி நம்முடைய சொந்த மக்களிடத்திற்கும், சொந்த நாடுகளுக்கும் திரும்பிப்போவோம்’ என்பார்கள்.
17
‘எகிப்திய அரசன் பார்வோன் ஒரு பெரிய சத்தம் மட்டுமே. அவன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டான்’ என்றும் அவர்கள் அங்கே சொல்வார்கள்.”
18
சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள அரசர் அறிவிக்கிறதாவது: “நான் வாழ்வது நிச்சயம்போல, மலைகளுக்கு மத்தியில் உள்ள தாபோரைப்போலவும், கடலருகே உள்ள கர்மேலைப்போலவும் ஒருவன் வருவான் என்பதும் நிச்சயம்.
19
எகிப்தில் குடியிருக்கும் நீங்கள் நாடு கடத்தப்படுவற்கு உங்கள் பயண மூட்டைகளை அடுக்கி ஆயத்தப்படுத்துங்கள். ஏனெனில், மெம்பிஸ் அழிக்கப்பட்டு, குடியிருப்பார் இல்லாமல், பாழடைந்து போகும்.
20
“எகிப்து ஒரு அழகிய இளம்பசு, ஆனால் வடக்கிலிருந்து அவளுக்கு விரோதமாக உண்ணி ஒன்று வருகிறது.
21
அவளுடைய இராணுவத்திலுள்ள கூலிப்படைகள், கொழுத்த கன்றுகளைப் போலிருக்கிறார்கள். அவர்களும் தங்களுடைய இடத்தில் நிற்க முடியாமல் ஒருமித்துத் திரும்பி தப்பி ஓடுவார்கள். ஏனெனில், அவர்கள் தண்டிக்கப்படும் வேளையான பேராபத்தின் நாள் அவர்கள்மீது வருகிறது.
22
பகைவன் பலத்துடன் முன்னேறி வரும்போது, எகிப்து தப்பியோடுகிற பாம்பைப்போல் சீறுவாள். அவர்கள் மரம் வெட்டுகிறவர்களைப்போல் கோடரிகளுடன் அவளுக்கெதிராக வருவார்கள்.
23
எகிப்தின் காடு அடர்த்தியாய் இருந்தபோதும், அதை வெட்டி வீழ்த்துவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட அதிகமானவர்கள். அவர்களை எண்ண முடியாது.
24
எகிப்தின் மகள் அவமானப்படுத்தப்பட்டு வடநாட்டு மக்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.”
25
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவதாவது: “நான் தேபேசின் ஆமோன் தெய்வத்தையும், பார்வோனையும், எகிப்தையும், அதன் தெய்வங்களையும், அதன் அரசர்களையும், பார்வோனை நம்பியிருக்கிறவர்களையும் தண்டிக்கப் போகிறேன்.
26
அவர்களைக் கொல்லத் தேடுகிறவர்களான, பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் கையிலும் அவனுடைய அதிகாரிகளின் கையிலும் நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன். இருந்தாலும், பிற்காலத்தில் எகிப்து நாடு முந்திய நாட்களில் இருந்ததுபோல குடியேற்றப்படும்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options