ஏசாயா 5:8-25
8
நாட்டில் பிறருக்கு இடம் இல்லாமல் தாங்கள்மட்டும், வீட்டுடன் வீட்டைச் சேர்த்து, வயலுடன் வயலை இணைத்து வாழ்கிறவர்களே, உங்களுக்கு ஐயோ!
9
எல்லாம் வல்ல யெகோவா என் காது கேட்க அறிவித்ததாவது: “நிச்சயமாகவே அந்த பெரும் வீடுகள் பாழாகும், அழகிய மாளிகைகள் குடியிருப்பாரின்றி விடப்படும்.
10
பத்து ஏக்கர் திராட்சைத் தோட்டம் ஒரு குடம் திராட்சை இரசத்தையே உற்பத்தி செய்யும். பத்து கலம் விதை விதைத்தால் ஒரு கலம் அளவு தானியத்தை மட்டுமே கொடுக்கும்.”
11
அதிகாலையில் எழுந்து மதுபானத்தை நாடி அலைந்து, இரவுவரை தரித்திருந்து வெறிக்கும்வரை குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஐயோ, கேடு!
12
அவர்கள் யாழோடும், வீணையோடும், தம்புராக்களோடும், குழலோடும், மதுவோடும் விருந்து கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்கள் யெகோவாவின் செயல்களை நினைப்பதோ, அவரின் கரம் செய்தவற்றை நோக்கிப் பார்ப்பதோ இல்லை.
13
எனவே எனது மக்கள் அறிவின்மையால் நாடுகடத்தப்படுவார்கள்; அவர்களின் பெருமதிப்பிற்குரியவர்கள் பட்டினியால் சாவார்கள், பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போவார்கள்.
14
எனவே பாதாளம் தன் தொண்டையை விரிவாக்கி, தன் வாயை அளவின்றித் திறக்கிறது. உயர்குடி மக்களும், பொதுமக்களும் அவர்களோடுகூட சண்டைக்காரரும், வெறியரும் அதற்குள் இறங்குவார்கள்.
15
இப்படியாக மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான். மனுக்குலமும் தாழ்த்தப்படும். அகங்காரரின் கண்களும் தாழ்த்தப்படும்.
16
ஆனால் எல்லாம் வல்ல யெகோவா தமது நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்த இறைவனும் தமது நீதியினால் தம்மைப் பரிசுத்தராக வெளிப்படுத்துவார்.
17
அப்பொழுது செம்மறியாடுகள் தங்கள் மேய்ச்சல் இடங்களில் மேயும். செல்வந்தரின் பாழடைந்த இடங்களை அந்நியர்கள் அனுபவிப்பார்கள்.
18
வஞ்சகத்தின் கயிறுகளால் பாவத்தையும், வண்டியின் கயிறுகளால் கொடுமையையும் இழுத்து, ஐயோ கேடு!
19
“நாம் காணத்தக்கதாக, இறைவன் துரிதமாய் வந்து தமது வேலையை விரைவாகச் செய்யட்டும். நாம் அறியத்தக்கதாக, இஸ்ரயேலரின் பரிசுத்தர் தமது திட்டத்தை வெளிப்படுத்தி, அதை நிறைவேற்றட்டும்” என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!
20
தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பை கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ, கேடு!
21
தங்கள் கண்களுக்கு ஞானியாக இருப்பவர்களுக்கும், தங்கள் கணிப்பில் புத்திசாலியாக இருப்பவர்களுக்கும் ஐயோ, கேடு!
22
திராட்சைமது குடிப்பதில் வீரரும், மதுபானம் கலக்குவதில் வல்லவர்களுமாயிருந்து,
23
இலஞ்சத்துக்காகக் குற்றவாளியை விடுவித்து, குற்றமற்றவனுக்கு நீதியை வழங்க மறுக்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!
24
ஆகவே அக்கினி ஜூவாலை வைக்கோலைச் சுட்டெரிப்பதுபோலவும், காய்ந்த புல் நெருப்பில் எரிந்து மடிவதுபோலவும், அவர்களின் வேர்கள் அழுகி, பூக்கள் புழுதிபோல் பறந்துவிடும். ஏனெனில் அவர்கள் எல்லாம் வல்ல யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து, இஸ்ரயேலின் பரிசுத்தருடைய வார்த்தையை இழிவுபடுத்தினார்கள்.
25
அதனால் யெகோவாவின் கோபம் தம்முடைய மக்களுக்கு விரோதமாய் பற்றியெரிகிறது: அவர் தமது கரத்தை உயர்த்தி, அவர்களை அடித்து வீழ்த்துகிறார். மலைகள் நடுநடுங்கின, அவர்களுடைய பிரேதங்கள் தெருக்களில் குப்பைபோல் கிடக்கின்றன. இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல், அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.
Settings