ஏசாயா 49:1-13
1
தீவுகளே, நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலுள்ள நாடுகளே, நீங்கள் இதைக் கேளுங்கள்: நான் கர்ப்பத்திலிருந்தபோதே யெகோவா என்னை அழைத்தார்; என் தாயின் வயிற்றில் இருக்கும்போதே என் பெயரைச் சொல்லி கூப்பிட்டார்.
2
அவர் எனது வாயை ஒரு கூரிய வாளைப்போல் ஆக்கினார், தமது கரத்தின் நிழலிலே என்னை மறைத்தார்; என்னைக் கூர்மையான அம்பாக்கி, தமது அம்பாறத் துணியில் மறைத்து வைத்தார்.
3
“இஸ்ரயேலே, நீ என் ஊழியக்காரன், எனது சிறப்பை உன்னிலே வெளிப்படுத்துவேன்” என்று அவர் என்னிடம் சொன்னார்.
4
ஆனால் நானோ, “வீணாக உழைக்கிறேன்; எனது பெலனை பயனற்றவற்றிற்கும் வீணானவற்றிற்கும் செலவழிக்கிறேன். அப்படியிருந்தும், எனக்குரியது யெகோவாவின் கையிலே இருக்கிறது; என்னுடைய வெகுமதியும் எனது இறைவனிடமே இருக்கிறது” என்றேன்.
5
இப்பொழுது யெகோவா சொல்வதாவது: யாக்கோபைத் தன்னிடம் திரும்பக் கொண்டுவரும்படியாகவும், இஸ்ரயேலர்களைத் தன்னிடம் கூட்டிச் சேர்க்கும்படியாகவும் அவருடைய பணியாளனாய் இருக்கும்படி என்னைக் கருப்பையில் உருவாக்கியவர் அவரே. யெகோவாவினுடைய பார்வையில் நான் கனம் பெற்றேன்; என் இறைவனே என் பெலனாயிருக்கிறார்.
6
அவர் சொல்வதாவது: “யாக்கோபின் கோத்திரங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்காகவும், இஸ்ரயேலில் நான் மீதியாக வைத்திருப்பவர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்காகவும், நீர் மட்டும் பணியாளனாய் இருப்பது போதுமானதல்லவே. ஆகவே நான் உம்மைப் பிற நாட்டு மக்களுக்கும் ஒரு வெளிச்சமாக ஏற்படுத்துவேன்; எனவே நீர் பூமியின் கடைசியில் இருக்கிறவர்களுக்கெல்லாம் என் இரட்சிப்பைக் கொண்டுவருவீர்” என்கிறார்.
7
இஸ்ரயேலரின் பரிசுத்தரும், மீட்பருமான யெகோவா சொல்வது இதுவே: அவமதிக்கப்பட்டு, நாடுகளால் அருவருக்கப்பட்டு, ஆட்சியாளர்களுக்கு அடிமையாய் இருந்த உனக்குச் சொல்வதாவது, “அரசர்கள் உன்னைக் காணும்போது அவர்கள் எழுந்து நிற்பார்கள், பிரபுக்கள் உன்னைக் கண்டு வணங்குவார்கள்; யெகோவா உண்மையுள்ளவராய் இருப்பதாலும், இஸ்ரயேலின் பரிசுத்தர் உன்னைத் தெரிந்துகொண்டதினாலும் அவர்கள் இப்படிச் செய்வார்கள்.”
8
யெகோவா சொல்வது இதுவே: “என் தயவின் காலத்திலே நான் உங்களுக்குப் பதிலளிப்பேன், இரட்சிப்பின் நாளில் நான் உங்களுக்கு உதவி செய்வேன்; நான் உங்களைப் பாதுகாத்து, மக்களிடையே நீங்கள் ஒரு உடன்படிக்கையாக இருக்கும்படி நான் உங்களை ஏற்படுத்துவேன். நாட்டைப் புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவரவும், பாழடைந்த உரிமைச் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்கவும்,
9
சிறைப்பட்டிருக்கிறவர்களைப் பார்த்து, ‘புறப்பட்டுப் போங்கள்’ என்று சொல்லவும், இருளில் உள்ளவர்களைப் பார்த்து, ‘வெளிப்படுங்கள்!’ என்றும் சொல்லவும் இப்படிச் செய்வேன். “வீதிகளின் ஓரங்களில் அவர்கள் மேய்வார்கள்; வறண்ட குன்றுகள் ஒவ்வொன்றிலும் அவர்கள் மேய்ச்சல் நிலத்தைக் காண்பார்கள்.
10
அவர்கள் பசியடைவதுமில்லை, தாகங்கொள்வதுமில்லை; பாலைவன வெப்பமோ, வெயிலோ அவர்களைத் தாக்காது. அவர்கள்மேல் இரக்கமாயிருக்கிறவரே அவர்களுக்கு வழிகாட்டி, அவர்களைத் தண்ணீர் ஊற்றுகளின் அருகே வழிநடத்திச் செல்வார்.
11
எனது எல்லா மலைகளையும் நான் வழிகளாக மாற்றுவேன்; எனது பெரும் பாதைகள் உயர்த்தப்படும்.
12
இதோ, அவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள், சிலர் வடக்கிலிருந்தும், சிலர் மேற்கிலிருந்தும், சிலர் சீனீம் பிரதேசத்திலிருந்தும் வருவார்கள்.”
13
வானங்களே, ஆனந்த சத்தமிடுங்கள்; பூமியே, சந்தோஷப்படு; மலைகளே, கெம்பீரமாய்ப் பாடுங்கள்! யெகோவா தமது மக்களைத் தேற்றுகிறார், துன்புற்ற தம்முடையவர்கள்மேல் இரக்கம் காட்டுவார்.
Settings