ஆதியாகமம் 24:10-27
10
பின்பு அவ்வேலைக்காரன் ஆபிரகாமிடமிருந்து எல்லா வகையான நல்ல பொருட்களையும், அவனுடைய பத்து ஒட்டகங்கள்மீது ஏற்றிக்கொண்டு போனான். அவன் மெசொப்பொத்தாமியா வழியாகப்போய், நாகோர் பட்டணத்தை வந்தடைந்தான்.
11
அவன் பட்டணத்திற்கு வெளியே இருந்த ஒரு கிணற்றருகே தன் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக மண்டியிடச் செய்தான்; அது பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை வேளையாக இருந்தது.
12
அப்பொழுது அவன், “யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, இன்று எனக்கு வெற்றியைத் தந்து, என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும்.
13
இதோ நான் இந்த நீரூற்றண்டையில் நிற்கிறேன், இந்த நகரத்து மக்களின் இளம்பெண்கள் தண்ணீர் மொள்ள வருகிறார்கள்.
14
நான் இங்கு வரும் ஒரு பெண்ணிடம், ‘உன் குடத்தைச் சரித்து நான் குடிக்கும்படி தண்ணீர் ஊற்று’ என்று சொல்வேன். அப்பொழுது, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவேன்’ என்று சொல்கிறவள் எவளோ, அவளே உமது அடியானாகிய ஈசாக்குக்கு நீர் தெரிந்துகொண்ட பெண்ணாயிருக்கட்டும். இதனால் என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டினீர் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்று மன்றாடினான்.
15
அவன் மன்றாடி முடிக்குமுன்பே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்தாள். அவள் ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்கும், அவன் மனைவி மில்க்காளுக்கும் மகனான பெத்துயேலின் மகள்.
16
அவள் மிகவும் அழகுடையவளும், ஒருவனுடனும் உறவுகொள்ளாத கன்னியாகவும் இருந்தாள். அவள் நீரூற்றண்டைக்குப் போய் தன் குடத்தை நிரப்பிக்கொண்டு மேலே ஏறிவந்தாள்.
17
வேலைக்காரன் அவளை சந்திக்கும்படி விரைந்து, “தயவுசெய்து உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்றான்.
18
உடனே அவள், “ஐயா, குடியுங்கள்” என்று சொல்லி, குடத்தை விரைவாய் இறக்கிக் கையில் பிடித்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
19
அவள் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தபின், “உமது ஒட்டகங்கள் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றாள்.
20
அவள் தன் குடத்திலிருந்த தண்ணீரை விரைவாய்த் தொட்டிக்குள் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைப்பதற்காக ஊற்றண்டைக்கு ஓடினாள். அவனுடைய ஒட்டகங்களுக்குப் போதுமான அளவு தண்ணீரை இறைத்து ஊற்றினாள்.
21
யெகோவா தான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்தாரோ இல்லையோ என்று அறிவதற்காக, அவன் ஒன்றும் பேசாமல் அவளைக் கூர்ந்து கவனித்தான்.
22
ஒட்டகங்கள் தண்ணீர் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் ஒரு பெக்கா நிறையுள்ள தங்க மூக்குத்தியையும், பத்து சேக்கல் நிறையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் அவளுக்குக் கொடுத்தான்.
23
பின்பு அவளிடம், “நீ யாருடைய மகள்? இரவு தங்குவதற்காக உன் தகப்பன் வீட்டில் எங்களுக்கு இடமுண்டா? தயவுசெய்து எனக்குச் சொல்” என்றான்.
24
அவள் அவனுக்குப் பதிலளித்து, “நான், நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான பெத்துயேலின் மகள்” என்றாள்.
25
மேலும் அவள், “எங்களிடத்தில் வைக்கோலும், ஒட்டகத்திற்குத் தீனியும் வேண்டியளவு இருக்கின்றன. உங்களுக்கு இரவில் தங்குவதற்கு இடமும் உண்டு” என்றாள்.
26
உடனே அந்த வேலைக்காரன் தலைதாழ்த்தி யெகோவாவை வழிபட்டு,
27
“என் எஜமான் ஆபிரகாமின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். என் எஜமானுக்கு அவர் தமது இரக்கத்தையும் உண்மையையும் காட்டாமல் இருக்கவில்லை. யெகோவா என்னையோ, என் எஜமானின் உறவினர் வீட்டுக்கே வழிநடத்தி வந்திருக்கிறார்” என்றான்.
Settings