எசேக்கியேல் 24:15-27
15
யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது.
16
“மனுபுத்திரனே, உன் கண்களுக்கு அருமையானவளை ஒரே அடியினால் உன்னைவிட்டு எடுத்துக்கொள்வேன். ஆனாலும் நீ புலம்பாமலும், அழாமலும் கண்ணீர் விடாமலும் இருக்கவேண்டும்.
17
அமைதியாய் துயர்கொண்டிரு. மரித்தவளுக்காகத் துக்கங்கொண்டாடாதே. தலைப்பாகையை அணிந்துகொள். செருப்பைப் போட்டுக்கொள். உன் முகத்தின் கீழ்ப்பாகத்தை மூடிக்கொள்ளாமலும் துக்கங்கொண்டாடுவோர் வழக்கமாகச் சாப்பிடும் உணவைச் சாப்பிடாமலும் இரு என்றார்.”
18
இதைப்பற்றி நான் காலையில் மக்களோடு பேசினேன், மாலையில் என் மனைவி இறந்துபோனாள். எனக்கு இடப்பட்ட கட்டளைப்படியே மறுநாள் காலை நான் செய்தேன்.
19
அப்பொழுது மக்கள் என்னிடம், “இக்காரியங்கள் எங்களுக்கு எவைகளைக் குறிக்கின்றன எனச் சொல்லமாட்டாயா?” என்று கேட்டார்கள்.
20
எனவே நான் அவர்களுக்குச் சொன்னதாவது: “யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
21
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே என இஸ்ரயேல் குடும்பத்தாருக்குச் சொல். ‘நீங்கள் பெருமைகொள்ளும் அரணும், உங்கள் கண்களின் அருமையும், உங்கள் பிரியமான பொருளுமான என் பரிசுத்த ஆலயத்தின் தூய்மையை நான் கெடுக்கப்போகிறேன். நீங்கள் யூதாவில் விட்டுவந்த மகன்களும், மகள்களும் வாளினால் மடிவார்கள்.
22
அப்பொழுது எசேக்கியேலாகிய நான் செய்ததுபோலவே நீங்களும் செய்வீர்கள். உங்கள் முகத்தின் கீழ்ப்பாகத்தை மூடிக்கொள்ளாமலும், துக்கங்கொண்டாடுவோர் சாப்பிடும் வழக்கமான உணவைச் சாப்பிடாமலும் இருப்பீர்கள்.
23
நீங்கள் உங்கள் தலைகளில் இருக்கும் தலைப்பாகைகளையும் உங்கள் கால்களில் இருக்கும் செருப்புகளையும், கழற்றிப் போடாதிருப்பீர்கள். நீங்கள் துக்கப்படவோ, அழவோ மாட்டீர்கள். உங்கள் பாவங்களினால் சோர்ந்துபோய் உங்களுக்குள்ளேயே புலம்புவீர்கள்.
24
எசேக்கியேல் உங்களுக்கு ஒரு அடையாளமாய் இருக்கிறான்; அவன் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள். இது நடைபெறும்போது, ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்கிறார் என்றேன்.’
25
“மனுபுத்திரனே, உனக்கு நான் கூறுவதாவது. அவர்களுடைய அரணையும், மகிழ்ச்சியையும், அவர்கள் கண்களின் அருமையையும், அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையையும் எடுத்துக்கொள்ளும் நாளிலே, அவர்கள் மகன்களையும், மகள்களையும் நான் எடுத்துக்கொள்வேன்.
26
அந்த நாளிலே எருசலேமிலிருந்து தப்பியோடிவரும் ஒருவன் வந்து உனக்குச் செய்தியை அறிவிப்பான்.
27
அப்பொழுது உன் வாய் திறக்கப்படும், நீ அவனுடன் பேசுவாய்; இனியொருபோதும் மவுனமாயிருக்கமாட்டாய். இவ்விதமாய் நீ அவர்களுக்கு ஒரு அடையாளமாய் இருப்பாய், அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.”
Settings