எசேக்கியேல் 24:1-14
1
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் நாளில் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2
“மனுபுத்திரனே, இந்தத் தேதியை, இதே நாளைக் குறித்துவை, ஏனெனில் இந்த நாளிலேதான் பாபிலோன் அரசன் எருசலேமை முற்றுகையிடத் தொடங்கினான்.
3
நீ இந்தக் கலகம் செய்யும் குடும்பத்தாருக்கு, ஒரு உவமையைக் கூறி அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே.’ “ ‘சமையல் பானையை அடுப்பிலே வை.’ அதை அடுப்பிலே வைத்து அதற்குள்ளே தண்ணீர் ஊற்று.
4
இறைச்சித் துண்டுகளையும் காலும் தொடையுமாகிய நல்ல துண்டுகள் அனைத்தையும் அதிலே போடு. நல்ல எலும்புகளால் பானையை நிரப்பு.
5
மந்தையில் சிறந்த ஆட்டையே தெரிந்தெடு. பானையின் கீழ் விறகுகளையடுக்கி அதிலுள்ள எலும்புகள் வேகும்படி நன்றாகக் கொதிக்க வை.
6
ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது: “ ‘அடிப்பிடித்து நுரை அகலாதிருக்கும் பானைபோல் இருக்கும்,’ இரத்தம் சிந்தும் இந்த எருசலேம் நகரத்திற்கு ஐயோ, கேடு! அத்துண்டுகளை ஒவ்வொன்றாக அவை வருகின்ற ஒழுங்குமுறையில் வெளியில் எடுத்து அப்பாத்திரத்தை வெறுமையாக்கு.
7
“ ‘அவள் சிந்திய இரத்தம் அவள் மத்தியிலே இருக்கிறது. ஏனெனில் அவள் சிந்திய இரத்தத்தைப் பாறையிலே ஊற்றினாள்.’ புழுதி மறைக்கும்படி அவள் அதை நிலத்தில் ஊற்றவில்லை.
8
எனக்கு கோபமூண்டு, பழிவாங்கும் நோக்கில் அவளது இரத்தம் மறைந்து விடாதபடி, நானே அதைப் பாறையில் ஊற்றினேன்.
9
ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘இரத்தம் சிந்தும் எருசலேம் நகரத்திற்கு ஐயோ, கேடு. நானும் விறகை உயரமாய் அடுக்குவேன்’ ”
10
எனவே, விறகைக் குவித்து நெருப்பை மூட்டு. இறைச்சியில் வாசனைச் பொருட்களைக் கலந்து நன்றாய்ச் சமை. எலும்புகளைக் கருகவிடு.
11
பின் வெறும் பாத்திரத்தை தணலின்மேல் வை. அது வெப்பமடைந்து, அதன் செம்பு தகதகத்து அதன் அசுத்தப் பொருள் உருகி, அதன் நுரைகள் எரிந்துபோகுமட்டும் அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.
12
அது முயற்சிகள் எல்லாவற்றையும் வீணாக்கியது. அதன் கெட்டியான நுரைகள் தீயினால்கூட அழிந்துபோகவில்லை.
13
“ ‘இப்பொழுது காமவேட்கையே உன் அசுத்தம். ஏனெனில் நான் உன்னைத் தூய்மைப்படுத்த முயன்றேன். ஆனால் நீயோ, உன் அசுத்தத்தில் இருந்து தூய்மையடைய மறுத்தாய். ஆகையால் உனக்கெதிராக இருக்கும் என் கோபம் தீருமட்டும், மறுபடியும் நீ தூய்மையடையமாட்டாய்.
14
“ ‘யெகோவாவாகிய நானே பேசினேன். நான் நடவடிக்கை எடுக்கவேண்டிய வேளை வந்துவிட்டது. நான் தாமதிக்கமாட்டேன். நான் கருணை காட்டப்போவதுமில்லை மனம் இரங்குவதுமில்லை. நீ உன் நடத்தைக்கும் உன் செயல்களுக்கும் ஏற்ப நியாயந்தீர்க்கப்படுவாய்’ ” என்று யெகோவா அறிவிக்கிறார்.
Settings