யாத்திராகமம் 12:29-39
29
அன்று நள்ளிரவு எகிப்திலுள்ள முதற்பிறந்த மகன்கள் எல்லாவற்றையும் யெகோவா அழித்தார்; அரியணையில் அமர்ந்திருந்த பார்வோனின் தலைப்பிள்ளை முதல், காவற்கிடங்கிலிருந்த கைதியின் தலைப்பிள்ளைவரை முதற்பேறுகள் அனைத்தையும், மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார்.
30
பார்வோனும், அவன் அதிகாரிகள் யாவரும், எகிப்தியர் அனைவரும் அன்றிரவில் விழித்து எழுந்தனர். எகிப்தில் ஒரு பெரிய ஓலம் உண்டாயிற்று. ஏனெனில் சாவு இல்லாத ஒரு வீடும் இருக்கவில்லை.
31
இரவிலேயே பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து அவர்களிடம், “எழும்புங்கள்! என் மக்களை விட்டுவிடுங்கள், உடனே போங்கள். நீங்களும், இஸ்ரயேலரும் நீங்கள் கேட்டுக்கொண்டபடியே போய் யெகோவாவை வழிபடுங்கள்.
32
நீங்கள் கேட்டுக்கொண்டபடியே உங்கள் ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் ஓட்டிக்கொண்டு போங்கள். என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான்.
33
இஸ்ரயேலரைத் தம் நாட்டைவிட்டு விரைவாய்ப் போகும்படி எகிப்தியரும் அவசரப்படுத்தினார்கள். “இல்லாவிட்டால் நாங்கள் எல்லோரும் இறந்துவிடுவோம்!” என்றார்கள்.
34
மக்கள் புளிப்பில்லாத பிசைந்த மாவையும், மாப்பிசையும் பாத்திரங்களையும் தங்கள் துணிகளால் சுற்றி, தங்கள் தோள்கள்மேல் சுமந்துகொண்டு போனார்கள்.
35
மோசே அறிவுறுத்தியபடியே இஸ்ரயேலர் தங்க நகைகளையும், வெள்ளி நகைகளையும், உடைகளையும் எகிப்தியரிடம் கேட்டு வாங்கினார்கள்.
36
யெகோவா இஸ்ரயேலருக்கு எகிப்தியரிடத்தில் தயவு கிடைக்கும்படி செய்தபடியால், அவர்கள் கேட்டதையெல்லாம் எகிப்தியர் கொடுத்தார்கள். இவ்விதமாக இஸ்ரயேலர் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.
37
அன்று இஸ்ரயேல் மக்கள் ராமசேஸை விட்டு சுக்கோத்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். பெண்களையும் பிள்ளைகளையும் தவிர, ஆண்கள் மட்டும் ஆறுலட்சம் பேர் இருந்தார்கள்.
38
அவர்களுடன் அநேக வேறு மக்கள் கூட்டமும் போனார்கள்; ஏராளமான ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் அவர்களுடன் சென்றன.
39
எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவினால் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டார்கள். அந்த மாவு புளிப்பில்லாதிருந்தது, ஏனெனில் அவர்கள் தங்களுக்கான உணவைத் தயாரிக்கும் முன்பே எகிப்திலிருந்து துரத்தப்பட்டார்கள்.
Settings