தானியேல் 10:1-10
1
பெர்சியாவின் அரசன் கோரேஸின் மூன்றாவது வருடத்திலே, “பெல்தெஷாத்சார்” என அழைக்கப்படும் தானியேலுக்கு ஒரு வெளிப்படுத்துதல் கொடுக்கப்பட்டது. அச்செய்தி உண்மையானது. அது ஒரு பெரிய யுத்தத்தைப்பற்றியது. அந்த செய்தியைப்பற்றிய விளக்கம் ஒரு தரிசனத்தின் மூலம் அவனுக்குக் கிடைத்தது.
2
தானியேலாகிய நான் அந்நாட்களில் மூன்று வாரங்களுக்குத் துக்கங்கொண்டாடினேன்.
3
மூன்று வாரங்கள் முடியும் நாள்வரை நான் சிறந்த உணவைச் சாப்பிடவில்லை. இறைச்சியையோ, திராட்சை இரசத்தையோ என் உதடுகள் தொடவும் இல்லை. எனது உடலில் எண்ணெய் தேய்க்கவும் இல்லை.
4
முதலாம் மாதம் இருபத்து நான்காம் நாளில், பெரிய ஆறான இதெக்கேல் ஆற்றின் கரையில் நான் நின்றேன்.
5
நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, எனக்கு முன்பாக மென்பட்டு உடை உடுத்தி, இடுப்பிலே ஊப்பாசின் சுத்த தங்கத்தால் செய்யப்பட்ட இடைக்கச்சையைக் கட்டிய ஒருவர் நின்றார்.
6
அவரது உடல் பத்மராகக் கல் போலிருந்தது. அவரது முகம் மின்னல் கீற்றுப்போலிருந்தது. அவரது கண்கள் சுடர் விட்டெரியும் பந்தங்கள் போலிருந்தன. அவரது கைகளும், கால்களும் துலக்கப்பட்ட வெண்கலத்தின் மினுக்கம் போலிருந்தன. அவரது குரல் மக்கள் கூட்டத்தின் சத்தம் போலிருந்தது.
7
தானியேலாகிய நான் மட்டுமே அந்தத் தரிசனத்தைக் கண்டேன். என்னோடிருந்த மனிதர்கள் யாரும் அதனைக் காணவில்லை. ஆனால் அவர்கள் மிகவும் திகிலடைந்ததினால் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.
8
எனவே நான் மட்டுமே தனிமையில் விடப்பட்டு, அப்பெரிய தரிசனத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் உடல் தளர்ந்தது, என் முகமும் மாறி வாடியது, நான் எதுவும் செய்ய முடியாதவனாயிருந்தேன்.
9
அப்பொழுது அவர் பேசுவதை நான் கேட்டேன். அந்தச் சத்தத்தை நான் கேட்டவுடன் முகங்குப்புற தரையில் விழுந்து, ஆழ்ந்த நித்திரைக்குள்ளானேன்.
10
உடனே ஒரு கரம் என்னைத் தொட்டு, நடுங்கிய என் கைகளையும் முழங்கால்களையும் உறுதியாக்கியது.
Settings