Skip to content
2 சாமுயேல் 15:13-23

2 சாமுயேல் 15:13-23

13
அப்பொழுது ஒரு தூதுவன் தாவீதிடம் வந்து, “இஸ்ரயேல் மக்களின் இருதயங்கள் அப்சலோமுடன் சேர்ந்திருக்கிறது” என்று சொன்னான்.
14
இதைக் கேட்ட தாவீது தன்னுடன் எருசலேமில் இருந்த எல்லா அதிகாரிகளிடமும், “வாருங்கள் நாம் இங்கிருந்து தப்பியோடுவோம். இல்லையென்றால் நம்மில் ஒருவனும் அப்சலோமிடமிருந்து தப்பமாட்டோம். உடனே நாம் இவ்விடத்தை விட்டு புறப்படவேண்டும். இல்லாவிட்டால் அவன் நம்மைப் பிடிக்கும்படி விரைந்துவந்து நம்மேல் அழிவைக் கொண்டுவந்து பட்டணத்தையும் வாளுக்கு இரையாக்குவான்” என்றான்.
15
அப்பொழுது அரச அதிகாரிகள் அரசனிடம், “எங்கள் தலைவனாகிய அரசன் சொன்னபடி செய்வதற்கு உமது அடியவராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம்” என்றார்கள்.
16
எனவே அரசன் தன் குடும்பத்தார் அனைவரும் பின்தொடர அவ்விடம்விட்டுப் புறப்பட்டான். ஆனாலும் தன் வைப்பாட்டிகள் பத்துப்பேரைத் தன் அரண்மனையைப் பார்த்துக்கொள்ளும்படி விட்டுப்போனான்.
17
இவ்வாறு அரசன் தன் மக்கள் அனைவரும் பின்தொடரப் புறப்பட்டான். அவர்கள் சிறிது தூரம் போனபின் தரித்து நின்றார்கள்.
18
அவனுடைய மனிதர்கள் கிரேத்தியர், பிலேத்தியர் என்பவர்களுடன் அணிவகுத்து அவனைக் கடந்து சென்றார்கள். காத்தூரிலிருந்து அவனுடன் வந்த அறுநூறு கித்தியரும் அரசனுக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றார்கள்.
19
அப்பொழுது அரசன் கித்தியனான ஈத்தாயிடம், “நீ ஏன் எங்களுடன் வரவேண்டும்? நீ திரும்பிப்போய் அரசன் அப்சலோமுடன் தங்கியிரு. நீ உன் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட அந்நியன் அல்லவா?
20
நீ நேற்றுதானே இங்கு வந்தாய்? நான் எங்கே போகிறேனென எனக்கே தெரியாமல் இருக்கும்போது, உன்னையும் எங்களுடன் அலைந்து திரியச் செய்வானேன்? நீ உன் உறவினரையும் கூட்டிக்கொண்டு திரும்பிப்போ; தயவும் உண்மையும் உங்களோடிருப்பதாக” என்றான்.
21
அதற்கு ஈத்தாய் அரசனிடம், “யெகோவா இருப்பதும், என் தலைவராகிய அரசன் வாழ்வதும் நிச்சயம்போல, நீர் எங்கெல்லாம் இருப்பீரோ வாழ்விலும் சாவிலும் நானும் அங்கெல்லாம் இருப்பேன் என்பதும் நிச்சயம்” என்றான்.
22
தாவீது ஈத்தாயிடம், “நீ முன்னால் அணிவகுத்துச் செல்” என்றான். எனவே கித்தியனான ஈத்தாய் அவனுடைய எல்லா மனிதருடனும், குடும்பங்களுடனும் அணிவகுத்துச் சென்றான்.
23
மக்கள் எல்லோரும் கடந்துசெல்கையில் நாட்டுப்புற மக்கள் எல்லோரும் சத்தமிட்டு அழுதார்கள். அரசனும் கீதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றான். மக்கள் பாலைவனத்தை நோக்கிச் சென்றார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options