Skip to content
2 இராஜாக்கள் 19:20-34

2 இராஜாக்கள் 19:20-34

20
பின்பு ஆமோஸின் மகனான ஏசாயா எசேக்கியாவுக்கு அனுப்பிய செய்தியாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா கூறுவது இதுவே: அசீரிய அரசனான சனகெரிப்பைக் குறித்து நீ செய்த மன்றாட்டைக் கேட்டிருக்கிறேன்.
21
ஆனபடியால் அவனுக்கெதிராக யெகோவா உரைத்த வார்த்தை இதுவே: “ ‘சீயோனின் கன்னிப்பெண் உன்னை இகழ்ந்து கேலி செய்கிறாள். எருசலேமின் மகள் நீ பயந்து ஓடுவதைப் பார்த்து, உன் பின்னால் நின்று ஏளனத்துடன் தலையை அசைக்கிறாள்.
22
நீ யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் சத்தமாய்ப் பேசி, அகங்காரக் கண்களினால் நோக்கினாய்? இஸ்ரயேலின் பரிசுத்தருக்கு எதிராக அல்லவா?
23
உனது தூதுவர்கள் மூலம் நீ ஆண்டவரை நிந்தித்துச் சொன்னதாவது: “நான் அநேக தேர்களுடன் மலையுச்சிகளுக்கும் லெபனோனின் சிகரங்களுக்கும் ஏறினேன். அங்குள்ள மிக உயர்ந்த கேதுரு மரங்களையும் மிகச்சிறந்த தேவதாரு மரங்களையும் வெட்டி வீழ்த்தினேன். அதன் உயர்ந்த கடைசி எல்லைக்கும், அதன் அடர்த்தியான காட்டுப் பகுதிக்கும் போனேன்.
24
அந்நிய நிலங்களில் கிணறுகள் வெட்டி, அதிலே தண்ணீர் குடித்தேன். என் உள்ளங்கால்களினால் எகிப்தின் நீரோடைகள் எல்லாவற்றையும் வற்றப்பண்ணினேன்.”
25
“ ‘வெகுகாலத்துக்கு முன்னமே நான் அதைத் திட்டமிட்டேன் என்பதை நீ கேள்விப்படவில்லையா? பூர்வ நாட்களில் நான் அதைத் திட்டமிட்டேன். இப்பொழுது அவற்றை நடைபெறச் செய்திருக்கிறேன். அதனால் நீ அரணான பட்டணங்கள் எல்லாவற்றையும் கற்குவியலாக மாற்றினாய்.
26
அவற்றின் மக்கள் வலிமை இழந்து, சோர்வுற்று வெட்கத்திற்குள்ளானார்கள். அவர்கள் வயலின் செடிகளைப்போலவும், இளம் கதிர்களைப்போலவும், கூரையில் முளைத்து வளரும் முன்பே பொசுக்கப்பட்டுப் போகும் புல்லைப்போலவும் இருக்கிறார்கள்.
27
“ ‘ஆனால் நீ எங்கே தங்கியிருக்கிறாய், எப்போது வருகிறாய், போகிறாய் என்பதும், நீ எனக்கு எதிராகக் கோபங்கொண்டிருக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும்.
28
எனக்கு எதிராகக் கோபங்கொண்டு, எனக்குக் காட்டும் அவமதிப்பும் என் காதுகளுக்கு எட்டியது. ஆகையால் என்னுடைய கொக்கியை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியாய் உன்னைத் திரும்பச்செய்வேன்.’
29
“எசேக்கியாவே, இதுவே உனக்கு அடையாளமாய் இருக்கும்: “இந்த வருடம் தானாக விளைகிறதை நீங்கள் சாப்பிடுவீர்கள். இரண்டாம் வருடத்தில் அதன் விதையிலிருந்து முளைப்பதைச் சாப்பிடுவீர்கள். மூன்றாம் வருடத்தில் நீங்களாக விதைத்து, அறுத்து, திராட்சைத் தோட்டங்களை நாட்டி அவைகளின் பழங்களைச் சாப்பிடுவீர்கள்.
30
யூதாவின் வம்சத்தில் தப்பி மீதியாயிருப்பவர்கள் மீண்டும் கீழே வேரூன்றி மேலே கனி கொடுப்பார்கள்.
31
ஏனெனில் எருசலேமிலிருந்து மீதியானவர்களும், சீயோன் மலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் கூட்டத்தாரும் வருவார்கள். சேனைகளின் யெகோவாவின் வைராக்கியமே இதை நிறைவேற்றும்.
32
“ஆகையால், அசீரிய அரசனைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே: “ ‘அவன் இந்தப் பட்டணத்திற்குள் செல்வதில்லை, இதின்மேல் அம்பை எய்வதுமில்லை. அவன் தனது கேடகத்தைப் பிடித்துக்கொண்டு அதற்குமுன் வருவதுமில்லை, அல்லது அதற்கு விரோதமாக முற்றுகைத்தளம் அமைப்பதுமில்லை.
33
அவன் வந்த வழியாகவே திரும்புவான்; இந்தப் பட்டணத்துக்குள் பிரவேசிக்கமாட்டான் என்று யெகோவா அறிவிக்கிறார்.
34
என் நிமித்தமும், என் அடியவன் தாவீதின் நிமித்தமும் நான் இந்தப் பட்டணத்தைப் பாதுகாத்துக் காப்பாற்றுவேன்.’ ”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options