Skip to content
1 இராஜாக்கள் 13:11-19

1 இராஜாக்கள் 13:11-19

11
அப்பொழுது பெத்தேலில் முதியவனான ஒரு இறைவாக்கினன் இருந்தான். அவனுடைய மகன்கள் அவனிடம் வந்து, இறைவனுடைய மனிதன் அன்று அங்கு செய்த யாவற்றையும் சொன்னார்கள். அத்துடன் அரசனுக்கு அவன் என்ன சொன்னான் என்பதையும் சொன்னார்கள்.
12
அவர்களுடைய தகப்பன் அவர்களிடம், “அவன் எந்த வழியாகப் போனான்” என்று கேட்டான். அதற்கு யூதாவிலிருந்து வந்தவனான இறைவாக்கினன் போன வழியை அவனுடைய மகன்கள் அவனுக்குக் காட்டினார்கள்.
13
அப்பொழுது அவன் தன் மகன்களிடம், “எனக்காகக் கழுதையின்மேல் சேணம் கட்டுங்கள்” என்றான். அவர்கள் சேணம் கட்டியபோது அவன் அதில் ஏறி,
14
இறைவனுடைய மனிதனைப் பின்தொடர்ந்து போனான். இறைவனுடைய மனிதன் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் இருப்பதைக் கண்டு, “யூதாவிலிருந்து வந்த இறைவனுடைய மனிதன் நீர்தானா” என்று கேட்டான். அதற்கு அவன், “நான்தான்,” என்று பதில் சொன்னான்.
15
அந்த இறைவாக்கினன் அவனிடம், “என்னுடன் வீட்டிற்கு வந்து சாப்பிடும்” என்றான்.
16
அதற்கு இறைவனுடைய மனிதன் அவனிடம், “நான் திரும்பி உன்னுடன் போகவும், இவ்விடத்தில் உன்னுடன் அப்பம் சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் முடியாது.
17
ஏனென்றால் நீ அங்கே அப்பம் சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ வேண்டாம். ‘நீ போன வழியில் திரும்பி வரவுங்கூடாது’ என்று யெகோவாவினால் கட்டளைப் பெற்றிருக்கிறேன்” என்றான்.
18
அப்பொழுது அந்த முதியவனான இறைவாக்கினன் அவனிடம், “நானும் உம்மைப் போல ஒரு இறைவாக்கினன்தான். யெகோவாவின் வார்த்தைப்படி ஒரு தேவதூதன் வந்து, ‘அவன் அப்பம் சாப்பிடவும், தண்ணீர் குடிக்கவும் உன்னுடைய வீட்டுக்கு அவனைத் திரும்ப கூட்டிக்கொண்டு வா’ என்று சொன்னார்” என்று கூறினான். இப்படி அவன் பொய்யையே கூறினான்.
19
எனவே இறைவனுடைய மனிதன் அவனுடன் திரும்பிப்போய் அவனுடைய வீட்டில் சாப்பிட்டு குடித்தான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options