1 கொரிந்தியர் 7:25-35
25
கன்னிகைகளைக் குறித்தோ: நான் கர்த்தரிடமிருந்து கட்டளை எதையும் பெறவில்லை. ஆனால் கர்த்தருடைய இரக்கத்தினாலே, உங்கள் நம்பிக்கைக்குரியவனாகிய நான், எனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிறேன்.
26
தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறபடியே இருப்பதுதான் நல்லது என நான் எண்ணுகிறேன்.
27
நீ திருமணம் செய்திருந்தால், விவாகரத்தை நாடவேண்டாம். திருமணம் செய்யாதிருந்தால், ஒரு மனைவியைப் பெற முயற்சிக்க வேண்டாம்.
28
நீ திருமணம் செய்தால், நீ பாவம் செய்யவில்லை; ஒரு கன்னிகை திருமணம் செய்தால், அவளும் பாவம் செய்யவில்லை. ஆனால் திருமணம் செய்கிறவர்கள் இந்த வாழ்க்கையில் அநேக பாடுகளை அனுபவிக்கவேண்டி நேரிடும். இந்தப் பாடுகளை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
29
ஆனால் பிரியமானவர்களே, நான் சொல்கிறதென்னவெனில், காலமோ குறுகினதாயிருக்கிறது. ஆகவே, இப்பொழுதிருந்தே மனைவிகளை உடையவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போல் வாழவேண்டும்;
30
துக்கமுள்ளவர்கள், துக்கமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; சந்தோஷப்படுகிறவர்கள், சந்தோஷமில்லாதவர்கள்போல் இருக்கவேண்டும்; எதையேனும் வாங்குகிறவர்கள், அது தங்களுக்குச் சொந்தமில்லையென்பதுபோல் இருக்கவேண்டும்;
31
உலக காரியங்களில் ஈடுபடுகிறவர்கள், அவைகளில் முழுவதும் மூழ்கிப் போகாதபடி கவனமாய் இருக்கவேண்டும். ஏனெனில், இவ்வுலகத்தின் தற்போதைய நிலை கடந்துபோகிறதே.
32
கவலைகளிலிருந்து நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். திருமணமாகாத ஒருவன், கர்த்தருடைய காரியங்களைக்குறித்தே அக்கறை உள்ளவனாயிருக்கிறான். கர்த்தரை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என எண்ணுகிறான்.
33
ஆனால் திருமணம் செய்தவனோ, இவ்வுலகக் காரியங்களைக்குறித்தே அக்கறை உள்ளவனாயிருக்கிறான். தன் மனைவியை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என எண்ணுகிறான்.
34
அவனுடைய நாட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. திருமணமாகாத ஒரு பெண் அல்லது ஒரு கன்னிகை கர்த்தருடைய காரியங்களைக்குறித்தே அக்கறையாயிருக்கிறாள்: உடலிலும் ஆவியிலும் தன்னைக் கர்த்தருக்கு அர்ப்பணிப்பதே அவளுடைய நோக்கமாய் இருக்கிறது. ஆனால் திருமணம் செய்த ஒரு பெண்ணோ இவ்வுலகக் காரியங்களைக்குறித்தே அக்கறையாயிருக்கிறாள். தன் கணவனை எவ்வாறு பிரியப்படுத்துவது என எண்ணுகிறாள்.
35
உங்கள் சொந்த நன்மைக்காகவே நான் இதைச் சொல்கிறேன். உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. நீங்களோ கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சரியான வழியில் வாழவேண்டும்.
Settings